“வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனம் தேவை!”.. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!!
Tamilnadu Assembly Election: முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படும் வரை நிர்வாகிகள் மற்றும் முகவர்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். எவ்விதத் தளர்வும் இன்றி முகவர்கள் செயலாற்ற வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
சென்னை, ஏப்ரல் 30: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்து இருந்தன. மேற்குவங்காளத்தில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து நிறுவனங்களும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
மேலும் படிக்க: கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி
ஆட்சியமைக்கப் போவது யார்?
தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் வெவ்வேறு நிறுவனங்கள் மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளதால், ஒரு குழப்பமான மற்றும் விறுவிறுப்பான சூழல் நிலவுகிறது. பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக கணிசமான இடங்களை பெறும் என்றும், தவெகவுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், அதிமுக முன்னிலை பெறுவதாக சில கருத்து கணிப்புகளும், தவெக ஆட்சி அமையும் என்று ஒரு கருத்து கணிப்பும் கூறுகிறது.
ஆலோசனைக் கூட்டத்தின் விபரங்கள்:
இந்நிலையில், கொடைக்கானல் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நேராக அண்ணா அறிவாலயம் சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் எனப் பலர் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, திமுகவிற்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
மேலும் படிக்க: விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. திடீரென மாற்றப்பட்ட நீதிபதி.. பின்னணியில் என்ன நடந்தது?
வாக்கு எண்ணிக்கை விழிப்புணர்வு:
மே 4-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது, முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படும் வரை நிர்வாகிகள் மற்றும் முகவர்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். எவ்விதத் தளர்வும் இன்றி முகவர்கள் செயலாற்ற வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அவர் ஆலோசனைகளை வழங்கினார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சில திமுகவிற்குச் சாதகமாகவும், சில மாற்றுக் கருத்துக்களையும் கூறிவரும் சூழலில், முதல்வர் ஸ்டாலின் முன்னெச்சரிக்கையாக இந்த ஆலோசனையை மேற்கொண்டிருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.