தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கடும் குழப்பம்!!
Tamilnadu Assembly Election Exit Poll Result: தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் வெவ்வேறு நிறுவனங்கள் மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளதால், ஒரு குழப்பமான மற்றும் விறுவிறுப்பான சூழல் நிலவுகிறது. பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளன.
Tamilnadu Exit Poll Result: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்து இருந்தன. மேற்குவங்காளத்தில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து நிறுவனங்களும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
இதையும் படிக்க: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. மாநிலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மே 4!
ஆட்சியமைக்கப் போவது யார்?
தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் வெவ்வேறு நிறுவனங்கள் மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளதால், ஒரு குழப்பமான மற்றும் விறுவிறுப்பான சூழல் நிலவுகிறது. பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக கணிசமான இடங்களை பெறும் என்றும், தவெகவுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், அதிமுக முன்னிலை பெறுவதாக சில கருத்து கணிப்புகளும், தவெக ஆட்சி அமையும் என்று ஒரு கருத்து கணிப்பும் கூறுகிறது.
திமுக கூட்டணிக்கு சாதகமான கணிப்புகள்:
மூன்று முக்கிய நிறுவனங்கள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணித்துள்ளன. பீப்பிள்ஸ் பல்ஸ் (People’s Pulse) திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். இதைப் போலவே பி-மார்க் (P-Marq) நிறுவனமும் திமுக கூட்டணிக்கு 125 முதல் 145 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேட்ரிஸ் (Matriz) நிறுவனம் திமுக கூட்டணி 122 முதல் 132 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணித்துள்ளது.
அதிமுக கூட்டணிக்குக் கிடைத்துள்ள ஆதரவு:
இரண்டு நிறுவனங்கள் அதிமுக கூட்டணி மீண்டும் அரியணை ஏறும் எனக் கணித்துள்ளன. ஜேவிசி (JVC) அதிமுக கூட்டணி 128 முதல் 147 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் எனக் கூறுகிறது. ஓட் வைப் (Vote Vibe) கணிப்பின்படி அதிமுக கூட்டணி 104 முதல் 124 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தாக்கம்:
இந்தத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் மிக முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பு அனைவரையும் அதிர வைத்துள்ளது. அதன்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 98 முதல் 120 தொகுதிகள் வரை வென்று முன்னிலை வகிக்கும் என்றும், திமுக 92 முதல் 110 இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணி 22 முதல் 32 இடங்களுக்கு தள்ளப்படும் என இந்நிறுவனம் கணித்துள்ளது.
ஆனால், இதனை தவிர்த்து பிற நிறுவனங்கள் அனைத்தும் விஜய்யின் கட்சிக்கு 8 முதல் 26 இடங்கள் வரை கிடைக்கலாம் என மாறுபட்ட கணிப்புகளை வழங்கியுள்ளன.
இதையும் படிக்க: வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!
தொங்கு சட்டமன்றம் அமையுமா?
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தமிழகத்தில் ஒரு தொங்கு சட்டமன்றம் அமையுமா அல்லது ஏதேனும் ஒரு கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறுமா என்பதில் பெரும் இழுபறி நீடிக்கிறது. விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பிரிக்கும் வாக்குகள் யாருக்கு வெற்றியைத் தரும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இப்போது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.