தவெக வேட்பாளர் தேர்வு தீவிரம்.. நாளை பனையூர் அலுவலகத்திற்கு வர 115 பேருக்கு விஜய் அழைப்பு..
Tamil Nadu Assembly Election: இதையொட்டி, தவெக சார்பில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில், முதற்கட்டமாக 50 பேரும், இரண்டாம் கட்டமாக 65 பேரும் என மொத்தம் 115 வேட்பாளர்கள் கட்சியின் தலைவர் விஜய்யால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Tamil Nadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) தனது தேர்தல் பணிகளைப் பன்மடங்கு வேகப்படுத்தியுள்ளது. வரும் ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுகவும், அதிமுகவும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கலில் உள்ளன. கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கேட்பதால், இழுபறி நீடித்து வருகிறது. அந்தவகையில், வேட்பாளர் தேர்வை இறுதி செய்து, அடுத்தகட்டமாக ஆவணச் சரிபார்ப்புப் பணிகளில் தவெக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது.
இதையும் படிக்க: கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் திமுக போட்டி?.. கூட்டணி கட்சிகளுக்காக தியாகம்.. பின்னால் பலே வியூகம்!!
115 வேட்பாளர்களுக்குப் பறந்த அழைப்பு:
இதையொட்டி, தவெக சார்பில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில், முதற்கட்டமாக 50 பேரும், இரண்டாம் கட்டமாக 65 பேரும் என மொத்தம் 115 வேட்பாளர்கள் கட்சியின் தலைவர் விஜய்யால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் நாளை (திங்கட்கிழமை) சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆவணச் சரிபார்ப்புப் பணி:
தமிழகத்தில் வரும் 30-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில், தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் ஆவணங்களைச் சரிபார்க்க இந்தச் சந்திப்பு கூட்டப்பட்டுள்ளது. வேட்புமனுவில் இணைக்கப்பட வேண்டிய உறுதிமொழிப் பத்திரங்கள் (Affidavit) மற்றும் இதர சட்டப்பூர்வ ஆவணங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்:
அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 115 பேரும் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், சொத்து விவரங்கள் மற்றும் வேட்புமனுத் தாக்கலுக்குத் தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆவணங்களில் எந்தவிதப் பிழையும் ஏற்பட்டு மனுத் தள்ளுபடி ஆகிவிடக் கூடாது என்பதில் கட்சித் தலைமை மிகவும் கவனமாக உள்ளது.
இதையும் படிக்க: “டாப் கியரில் நாதக”.. முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்.. நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான்..
களப்பணியில் விஜய்:
கட்சித் தலைவர் விஜய், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் நேரடி கவனம் செலுத்தி வருகிறார். தகுதியான மற்றும் மக்கள் செல்வாக்குள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே தனது நோக்கம் என்பதை அவர் முன்னதாகவே தெளிவுபடுத்தியிருந்தார். நாளை 115 வேட்பாளர்களும் பனையூர் அலுவலகத்திற்கு வர உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்களுடன் அவர்களின் ஆதரவாளர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரிடமும் தனித்தனியாக ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிகிறது.