பிரதமர் மோடி சென்னை வருகை.. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார்.. முக்கிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!!
PM Modi's Visit to Chennai: மயிலாப்பூர் மற்றும் தி.நகர் பகுதிகளில் ரோடு ஷோ அல்லது வாகனப் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் வருகையையொட்டிச் சென்னையின் முக்கியச் சாலைகளான ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை மற்றும் கிண்டி பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் ஏப்.9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டுச் சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் அவர் தங்கும் ஆளுநர் மாளிகை மற்றும் அவர் செல்லும் வழித்தடங்கள் என அனைத்துப் பகுதிகளும் காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? வெளியான லோக் போல் கருத்துக்கணிப்பு
3,000 போலீஸ் படை:
சென்னை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை மற்றும் சிறப்புப் பிரிவினரும் அடங்குவர். சென்னை விமான நிலையம் மற்றும் அவர் தங்கும் கிண்டி ஆளுநர் மாளிகை ஆகிய பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா விமானங்களைப் பறக்கவிடக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் தங்கும் இடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ‘மோப்ப நாய்’ உதவியுடன் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமரின் பயணத் திட்டம்:
பிரதமரின் இரண்டு நாள் பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை எனத் தெரிகிறது. எனினும், ஏப்ரல் 3ம் தேதி மதியம் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிவிட்டு மீண்டும் இரவு சென்னை திரும்புகிறார். தொடர்ந்து, சென்னையில் ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், ஏப்.4ம் தேதி காலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ரோடு ஷோவுக்கு வாய்ப்பு?:
பின்னர், மயிலாப்பூர் மற்றும் தி.நகர் பகுதிகளில் ரோடு ஷோ அல்லது வாகனப் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் வருகையையொட்டிச் சென்னையின் முக்கியச் சாலைகளான ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை மற்றும் கிண்டி பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரங்களில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்படலாம் என்பதால், பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் தங்களின் பயண நேரத்தைச் சற்று முன்னதாகவே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிக்க: “நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?”.. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!
அரசியல் முக்கியத்துவம்:
2026 தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. திமுக கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய சக்திகளுக்கு இடையே, பாஜக தனது செல்வாக்கை நிரூபிக்கப் பிரதமரின் இந்தப் பிரசாரம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மதுரை மற்றும் சென்னையை மையமாகக் கொண்ட அவரது பிரசாரங்கள் தென் மற்றும் வட மாவட்ட வாக்குகளைக் கவரும் ஒரு வியூகமாகப் பார்க்கப்படுகிறது.