ஒரே வாரத்தில் 4 நாட்கள் விடுமுறை.. வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கல்.. திகைக்கும் வேட்பாளர்கள்..
Tamil Nadu Assembly Election: இந்த அறிவிப்பின்படி பார்த்தால், மார்ச் 30ம் தேதி, ஏப்ரல் 2, 4 மற்றும் 6ம் தேதி ஆகிய 4 நாட்களில் மட்டுமே வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும். அதிலும் பல வேட்பாளர்கள் நல்ல நாள், நேரம் பார்ப்பார்கள்.
Tamil Nadu Polls 2026: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது என்றும், 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்தவகையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல், புதுச்சேரியில் ஏப்.9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 16ம் தேதி முதல் தொடங்கி 23ம் தேதி நிறைவுப்பெற்றது.
இதையும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கல்:
இதனிடையே, தமிழகத்தில் வரும் 30ம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது. அதாவது, 8 நாட்கள் இடைவெளியில் வேட்புமனு தாக்கல் செய்தாக வேண்டும். ஆனால், அதில் தான் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இந்த 8 நாட்களில், 4 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக உள்ளன. இதனால், திகைத்துபோன அரசியல் கட்சிகள், வெயிலின் தாக்கம், வேட்புமனுத் தாக்கல் செய்ய குறுகிய நேரம், ஒரேநேரத்தில் அலைமோதும் கூட்டம் போன்றவற்றை நினைத்து தவித்து வருகின்றனர்.




ஒரே வாரத்தில் 4 நாட்கள் விடுமுறை:
இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது, வருகிற 30ம் தேதி (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 31.3.2026 (செவ்வாய்க்கிழமை), 1.4.2026 (புதன்கிழமை), 3.4.2026 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. 5.4.2026 (ஞாயிற்றுக்கிழமை) வழக்கமான விடுமுறை நாளாகும். இந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நல்ல நாள், நேரம் பார்க்கும் வேட்பாளர்கள்:
இந்த அறிவிப்பின்படி பார்த்தால், மார்ச் 30ம் தேதி, ஏப்ரல் 2, 4 மற்றும் 6ம் தேதி ஆகிய 4 நாட்களில் மட்டுமே வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும். அதிலும் பல வேட்பாளர்கள் நல்ல நாள், நல்ல நேரத்தைத் தேர்வு செய்து தான் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வார்கள். அப்படி பார்க்கும்போது, மார்ச் 30ம் தேதி பிரதோஷமாகும். ஆனால், அன்று நல்ல நேரம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையும், மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரையிலும் உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிகள்படி, காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
இதையும் படிக்க : அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாக போட்டி… எந்தெந்த இடங்கள் தெரியுமா.. லிஸ்ட் இதோ!
ஒரேநாளில் அதிக வேட்பாளர்கள் திரள வாய்ப்பு:
ஏப்ரல் 2ம் தேதி தேய்பிறை பிரதமையாகும். 4ம் தேதி தேய்பிறை திரிதியையாகும். 6ம் தேதி தான் சுபமுகூர்த்த நாளாக உள்ளது. ஆனாலும், அன்று நல்ல நேரம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையும், மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரையிலும் உள்ளது. எனவே, 6ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.