கூட்டணி வாசல் கதவு திறந்திருந்தும் பயனில்லை…தேர்தலில் தனித்து களம் காணும் முடிவில் தமிழக வெற்றிக் கழகம்..ஏன் இந்த திடீர் முடிவு!
Tamilaga Vettri Kazhagam : தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி வாசல் கதவு திறந்திருந்தும் கட்சிகள் கூட்டணிக்கு வருகை தராததால், வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக விஜயகாந்த் போல தவெகவும் தனித்து களம் காணும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் சார்பில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 1952- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 16 முறை சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில், காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், ஒரு கட்சியும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கியது கிடையாது. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய முதல் மாநில மாநாட்டில் தனது கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருந்தார். இந்த அதிரடியான அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை எந்த கட்சிகளும் கூட்டணிக்கு வந்த மாதிரி தெரியவில்லை. இனிமேல் வருகிறதா என்பதும் சந்தேகமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தவெகவில் கூட்டணி சேரும் கட்சிகள்
ஏனென்றால், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் கூட்டணி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், தமிழக வெற்றிக் கழகத்தில் மற்ற கட்சிகள் இணைவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவாக உள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இணைப்பதற்காக 70 சட்டமன்ற தொகுதிகள், துணை முதல்வர் பதவி, 6 அமைச்சர் பதவி, 2029 மக்களவைத் தேர்தலில் 28 தொகுதி என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை விஜய் அறிவித்ததுடன், காங்கிரஸுக்காக கூட்டணி வாயில் கதவை திறந்து வைத்துள்ளார்.
மேலும் படிக்க: திமுக உடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்? விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் – டி.கே.எஸ் இளங்கோவன்..




காங்கிரஸை கூட்டணியில் இணைக்க தவெக தயக்கம்
இதனால், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் பங்கு வேண்டும் என்று அந்த கட்சியின் தலைமைக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. ஆனால், இந்த நெருக்கடியை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாத வகையில் திமுக தலைமை இருந்து வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மற்றும் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு சில நிபந்தனைகள் இருப்பதால், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைப்பதற்கு தவெக சற்று தயங்குவதாக கூறப்படுகிறது.
தனித்து களம் காணும் முடிவில் தவெக
இதனால், வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்காமல் தனித்தே களம் காணும் எனவும், தனித்து களம் காண விடப்படும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான முடிவுகளையும் தமிழக வெற்றிக் கழக தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தவெகவுக்கு 18 சதவீத வாக்குகள் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில், தவெக தனியாக கணிப்புகள் மேற்கொண்டதில் 30 சதவீத வாக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளதாம். இதனால், விஜயகாந்த் போல விஜயும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தவெக வருகையால் திமுக வாக்கு வங்கி பாதிக்கும் – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..