சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு திடீர் தடை…ரசிகர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசில்கள்…கடைகளிலும் விசில் விற்பனைக்கு நோ!
Chepauk Cricket Stadium : சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தடை மீறி பயன்படுத்தியதாக ரசிகர்களிடம் இருந்து விசில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மைதானத்தை சுற்றி உள்ள கடைகளிடம் விசில் விற்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்தியாவில் ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கான போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 8 ) நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள் விசில் கொண்டு வருவதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். அதன்படி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் நுழைவு வாயிலில் ரசிகர்களிடம் விசில் இருக்கிறதா என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதையும் மீறி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்குள் கிரிக்கெட் ரசிகர்கள் விசில் கொண்டு சென்றதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, சில ரசிகர்களிடம் இருந்து விசில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடைகளில் விசில் விற்க தடை விதித்த போலீசார்
இதே போல, சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி சாலை ஓரம் கடை வைத்துள்ள வியாபாரிகளிடம் விசில் விற்பனை செய்யக்கூடாது என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முதல் முறையாக விசில் கொண்டு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.
மேலும் படிக்க: அதிகாலையில் ஏன் இந்த பனிமூட்டம்? இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? வானிலை ரிப்போர்ட்




சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு
இந்த போட்டியை பார்க்க வரும் கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு போக அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை மீறி விசில் கொண்டு வரும் ரசிகர்களை கண்காணிப்பதற்காக காவலர்களும் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியேயும் விசில்கள் விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னமாக விசில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசியல் காரணமாக விசில் பயன்படுத்த தடையா
இதனால், அரசியல் காரணமாக சேப்பாக்கம் மைதானத்தில் விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. அதன்படி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும், சிஎஸ்கே அணியின் தாரக மந்திரமான “விசில் போடு” என்பதற்கு அனுமதி இல்லை என்றால் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் செல்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதே போல, டி என் சி ஏ தனது எக்ஸ் பக்கத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் விசில் இடம் பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து விவகாரம்…தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீது பாய்ந்த நடவடிக்கை!