S.Regupathy Tamil Nadu Elections 2026: தேசிய அரசியல் டூ மாநில அரசியல்.. மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா எஸ்.ரகுபதி!
Tamil Nadu Elections 2026: அதிமுக-இல் இருந்து விலகி திமுகவில் இணைந்து மாநில அரசியல் முதல் தேசிய அரசியல் வரை சென்று தற்போது, சட்டத்துறை அமைச்சராக இருந்து வரும் எஸ்.ரகுபதி வருகிற தேர்தலில் திருமயம் தொகுதியில் மீண்டும் வெற்றியை தக்க வைத்து அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா.

மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா எஸ்.ரகுபதி
திமுகவில் சட்டத்துறை அமைச்சராக இருந்து வருபவர் எஸ். ரகுபதி. இவர், 1950- ஆம் ஆண்டு ஜூலை 30- ஆம் தேதி கோபால் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவர், இளமைக் காலத்திலேயே அரசியல் மீதான ஆர்வம் காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொண்டனாக இணைந்தது முதல் கட்சி பணியாற்றி வந்த எஸ். ரகுபதிக்கு கடந்த 1991- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எஸ். ரகுபதி களம் கண்ட முதல் தேர்தலிலேயே வெற்றி வாய்ப்பையும் பெற்றார். இந்த வெற்றியுடன், வீட்டு வசதித்துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் பொறுப்பும் ரகுபதியை தேடி வந்தது. அதன்படி 1992 முதல் 1993 வரை அந்த பதவியில் இருந்தார். பின்னர் அந்த இலாகா அவரிடம் இருந்து திரும்ப பெறப்பட்டு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை இலாகா வழங்கப்பட்டது.
மாநில அரசியல் டூ தேசிய அரசியல்
இவ்வாறாக அதிமுகவில் ரகுபதியின் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்ந்த நிலையில், சில காரணங்களால் அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகிய ரகுபதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, 2004- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் களமிறங்கிய எஸ். ரகுபதி வெற்றி பெற்று எம்பி ஆனார். அத்துடன், மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
மேலும் படிக்க: வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் கோலோச்சுவாரா ஓ.எஸ்.மணியன்!
விராலிமலை தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த ரகுபதி
இதன் பின்னர், மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பிய எஸ். ரகுபதி 2011 சட்டமன்ற தேர்தலில் திருமயம் தொகுதியில் போட்டியிடாமல் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மாறி போட்டியிட்டார். ஆனால், அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கரிடம், தனது வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர், 2014 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருமயம் தொகுதியில் எஸ். ரகுபதி போட்டியிட்டு தனது வெற்றியை நிரூபித்து மீண்டும் சட்டமன்றத்துக்குள் அடி எடுத்து வைத்தார்.
திருமயத்தில் வெற்றியை தக்க வைப்பாரா
இதே போல, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருமயம் தொகுதியில் களமிறங்கிய எஸ். ரகுபதி வெற்றியை தனதாக்கி கொண்டதுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் அமைச்சரவையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அமைச்சராகவும் இருந்து வருகிறார். அத்துடன் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலிலும் எஸ். ரகுபதி வெற்றி வாய்ப்பை எளிதாக பெற்று விடுவார் கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக வரும் பட்சத்தில், அவருக்கு மீண்டும் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்க திமுக தலைமை தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா மும்முறை வெற்றி.. மீண்டும் வெற்றி வசமானால் அமைச்சரவையில் இடம் உறுதி?