புதுச்சேரி, ஏப்ரல் 3, 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, லக்ஷ்மி ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதற்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் ஆகியவை அனைத்தும் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ:
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். புதுச்சேரி விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் அஜந்தா சிக்னல் சந்திப்புக்கு சென்றார். அங்கு திறந்த வாகனத்தில் ஏறி, மக்கள் மத்தியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. 12 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு..
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, புதுச்சேரி முழுவதும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சாலைப் பயணம் மேற்கொண்ட பிரதமருக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை:
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வந்தடைந்தார்.
ஏப்ரல் 4, 2026 (நாளை), பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். இதன் காரணமாக, அவர் இன்று இரவு சென்னையில் தங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள், பிரச்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.