திமுக தோல்விக்கு இவர்கள் தான் காரணம்.. குண்டை தூக்கி போட்ட மு.க.ஸ்டாலினுக்கு நெருங்கிய நபர்!
Tamilnadu Assembly Election Result : தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தோல்வி அடைவதற்கு அமைச்சர்களே காரணம் என்று அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலினின் உறவினர், மருத்துவர் ராஜமூர்த்தி தெரிவித்தார் .
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் பரபரப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மீண்டும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி அமையும் என்று அந்த கட்சியை சேர்ந்தவர்களும் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தெரிவித்து இருந்தன. அதன்படி, வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. ஆனால், நேரம் செல்ல செல்ல தமிழக வெற்றி கழகம் 100- க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கியது. தற்போது வரை தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு அடுத்ததாக திராவிட முன்னேற்ற கழக கூட்டணி 66 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 62 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
தோல்வியை தழுவும் நிலையில் திராவிட முன்னேற்ற கழகம்
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் 2.0 திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சி அமையும் என்று அந்த கட்சியினர் கூறிவந்த நிலையில் தற்போது தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு க ஸ்டாலினின் உறவினரும், மருத்துவருமான ஜெ. ராஜமூர்த்தி தனது சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
திமுகவின் தோல்விக்கு இவர்கள் தான் காரணம்
அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு காரணம் சில அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களே என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வெற்றியை கொண்டாடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், திமுக கூட்டணி தொடர்ந்து பின்னடைந்து வருவதன் காரணமாக கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
கண்ணீர் விட்டு கதறி அழுத திமுக தொண்டர்
இதன் காரணமாக, அண்ணா அறிவாலயம் முன் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர். அதில், ஒரு தொண்டர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தமிழக மக்களுக்கும், பெண்களுக்கும் திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. ஆனால், இந்த தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.