ஆதரவாளருக்கு சீட் கேட்ட ஓபிஎஸ்? மு.க.ஸ்டாலின் கூறிய பதில்.. ஏமாற்றத்தில் பன்னீர் செல்வம் எடுத்த முடிவு!
O Panneerselvam : திராவிட முன்னேற்ற கழகத்தில் தனது ஆதரவாளர்கள் 4 பேருக்கு ஓ. பன்னீர் செல்வம் சீட் கேட்டதாகவும், அதற்கு மு. க. ஸ்டாலின் அளித்த பதிலால் அவர் ஏமாற்றம் அடைந்து முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக அந்தக் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை தொடங்கி மீண்டும் அந்த கட்சியில் இணைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இதற்காக, பல்வேறு வகையில் தூதுவிட்டும் அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் காண்பிக்கப்படவில்லை. இதனால், பாஜகவின் தயவை நம்பி இருந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு நம்பிக்கை தரும் அளவில் அழைப்புகள் எதுவும் வரவில்லை. இதனால், தனித்து விடப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது அணியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாகினர். இதைப் போல. மேல்சபை எம்பி தர்மர் அதிமுகவில் இணைந்து விட்டார்.
கழன்று சென்ற ஓபிஎஸ் அணியின் அச்சாரம்
மேலும், ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு அச்சாரமாக இருந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தனியாக கட்சி தொடங்கி விட்டார். இதனால், சட்டமன்ற தேர்தல் குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியாத நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டார். இதனிடையே, ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. அதுவும் அவருக்கு பெரிதளவில் கை கொடுக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. ஏனென்றால், ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்கினால் அதிமுகவில் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பது தான். இதனால், திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் படிக்க: “பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி”.. ஓபிஎஸ் மீது மரியாதை உள்ளது.. நயினார் நாகேந்திரன்




திமுகவில் இணையும் முடிவில் ஓபிஎஸ்
இதற்கு அச்சாரமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவின்போது, முதல்வர் மு. க. ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அத்துடன் ஓபிஎஸ் ஆதரவாளரான ஐயப்பன் எம்எல்ஏ சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து புகழ்ந்து பேசியிருந்தார். மீண்டும் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவார் என்று தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், முதல்வருடன், ஓபிஎஸ் சந்திப்பின்போது, நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எனது ஆதரவாளர்கள் 4 பேருக்கு எங்கள் அமைப்பு சார்பில் போட்டியிடுவதற்கு சீட் வழங்குமாறு ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்ததாக தெரிகிறது.
திமுகவின் அழைப்பை நிராகரித்த ஓபிஎஸ்
ஆனால், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது. மேலும், திமுகவில் இணைந்தால் உரிய கௌரவம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. இதனால், ஏமாற்றம் அடைந்த ஓபிஎஸ் யோசித்து பதில் கூறுவதாக கூறிவிட்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அதிமுகவில் 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைவது சரியாக இருக்காது என்று அந்த அழைப்பை ஓ பன்னீர்செல்வம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு