தமிழக சட்டமன்ற தேர்தல்.. வேட்பாளர்கள் எல்லை மீறினால் ஊழல் நடவடிக்கை.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
Tamil Nadu Assembly Elections: தமிழக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தங்களுக்கான ரூ.40 லட்ச செலவு எல்லையை மீறி செலவு செய்தால், அது ஊழலாக எடுத்துக் கொள்ளப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வேட்பாளர்கள் எல்லை மீறினால் நடவடிக்கை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்துடன் சேர்ந்து 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன்படி, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு செய்யும் செலவினங்களை கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் குழு அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் குழுவினருக்கு வேட்பாளர்களின் செலவுகளை எவ்வாறு கணக்கிட வேண்டும். பறக்கும் படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் ஆய்வை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வேட்பாளர் செலவின தொகை ரூ.40 லட்சமாக நிர்ணயம்
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் செலவினத் தொகை ரூ.40 லட்சமாக தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, இந்த தொகையை மீறி செலவு செய்யக்கூடாது. ஆனால், அதனையும் மீறி செலவு செய்யும் பட்சத்தில், 1951- ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77 (3) மற்றும் பிரிவு 123 (6)- இன் கீழ் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஊழலாக எடுத்துக் கொள்ளப்படும். இந்த செலவின கணக்கில் உண்மைக்கு மாறான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
மேலும் படிக்க: “இன்னும் 2 வாரத்தில் ஊழலில் சிக்கிய அமைச்சர் சிறைக்கு செல்வார்”.. பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்!!
வேட்பாளர் வங்கி கணக்கு விவரங்கள் கண்காணிப்பு
மேலும், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படும். இதில், சட்டத்துக்குட்பட்ட செலவு மற்றும் சட்டத்துக்கு புறம்பான செலவு என இரு வகையாக கணக்கீடு செய்யப்படும். இதில், சட்டத்துக்குட்பட்ட செலவில், கட்சி சார்பில் முன் அனுமதி பெற்ற பொதுக்கூட்டம், வேட்பாளர் அலுவலகம், போஸ்டர், ஊர்வலம், பிரச்சாரத்துக்கு அனுமதி பெற்ற வாகனங்கள், விளம்பரங்கள், வேட்பாளருடன் வரும் ஆதரவாளர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விலை பட்டியல்
இதில், அரசு, பொது இடங்களில் சுவர் விளம்பரம், கட் அவுட், பிளாஸ்டிக் பேனர்கள் உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது. இந்த செலவுகள் அனைத்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விலை பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும். வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், மதுபுட்டிகள் வழங்குதல், பரிசு பொருட்கள் வழங்குதல் உள்ளிட்டவை இந்திய தண்டனை சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பிரச்சாரங்களை வீடியோ பதிவு செய்யும் குழு மற்றும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக?.. திமுகவின் மெகா கூட்டணியால் மாறும் எதிர்கட்சிகளின் வியூகம்..