நெருங்கும் சட்டமன்ற தேர்தல்… தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் வருகை!
Chief Election Commissioner: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் தமிழகம் வருவது உறுதியாகி உள்ளது. அதன்படி, அவர் வருகிற பிப்ரவரி 26, 27- ஆம் தேதிகளில் வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது முக்கிய ஆலோனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் படு வேகமாக தயாராகி வருகிறது. தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த முகாம் மேற்கொள்ளப்பட்டு அதில் வேறு இடங்களுக்கு மாறிய வாக்காளர்கள், உயிரிழந்த வாக்காளர்கள், இரு இடங்களில் பதிவு பெற்ற வாக்காளர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் வரை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, வாக்காளர் இறுதி பட்டியல் வருகிற 23- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் தீவிரமாக களப் பணி ஆற்றி வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு அடுத்த மாதம் 2 அல்லது 3- ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் துணை ஆணையர் குழு நேரடியாக சென்று அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தேர்தல் குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
தற்போது அந்த குழுவானது, அண்மையில் தமிழகம் வந்திருந்த நிலையில், இங்கு அரசுத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோருடன் இரு நாள்கள் ஆலோசனை மேற்கொண்டிருந்தது. இதில், தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் தமிழகத்துக்கு நேரடியாக வருகை தந்து மீண்டும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் கள.. அடுத்த மாதம் இரண்டு முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. தே.ஜ கூட்டணியில் வியூகம் என்ன?




தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை
இதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம் வருவது உறுதியாகி உள்ளது. இதில், தலைமை தேர்தல் ஆணையர் வருகிற பிப்ரவரி 26 ( வியாழக்கிழமை) மற்றும் பிப்ரவரி 27 ( வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகை தர உள்ளார்.
அரசு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை
இந்த வருகையின் போது, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இவரது வருகையை தொடர்ந்து, தமிழகத்துக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டு, தேர்தல் தேதி மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வர உள்ளன.
மேலும் படிக்க: அம்மா உணவகங்களின் நிலை என்ன? கேள்வி எழுப்பிய வேலுமணி… திமுக அமைச்சருடன் காரசார விவாதம்