ரெப்போ வட்டியில் மாற்றமில்லை.. 5.25% ஆகவே தொடரும்.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
Repo Rate Remain Unchanged | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி குறித்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒருமுறை பணவியல் கொள்கை குழுவை கூட்டி முடிவு எடுக்கும். அந்த வகையில், இன்று கூடிய குழு ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி, ஏப்ரல் 08 : ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) 5.25 சதவீதமாகவே தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு (MPC – Monetary Policy Committee) ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதன் அடிப்படையில் இந்த அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறித்து ஆர்பிஐ கவர்னர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?
ரெப்போ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி ஆகும். பொதுவாக இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். குறிப்பாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பணவியல் கொள்கை குழு கூடி ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், இன்று பணவியல் கொள்கை குழு கூடிய நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகவே வைத்திருக்க அந்த குழு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க : புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் சிக்கல்?.. வெளியான முக்கிய தகவல்!




ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருக்க என்ன காரணம்?
ஈரான் போர் உள்ளிட்ட சரவதேச அளவில் நடைபெறும் பிரச்னைகள் காரணமாக, புவிசார் பதற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. கடந்த முறை நடைபெற்ற பணவியல் கொள்கை குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க : பிபிஎஃப் திட்டத்தின் மீது குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.. அதற்கு முன்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
இந்தியாவின் பணவீக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக அளவில் நிலவும் புவிசார் பதற்றங்கள், எண்ணெய் விலை உயர்வு மற்றும் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஆகியவை நிலவுகிறது. இதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல் இருந்து வருகிறது.
ரெப்போ வட்டி விகிதம் பொதுமக்களின் வாழ்க்கையில் எப்படி எதிரொலிக்கும்?
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும்போது கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும். இந்த நிலையில், ஃப்ளோட்டிங் வட்டி முறையில் கடன் வாங்கியவர்களுக்கு கடனுக்கான வட்டி விகிதம் குறையும். இதேபோல ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியும் குறையும். அவ்வாறு குறையும் பட்சத்தில் முதலீட்டாளர்களுக்கு அது குறைந்த வருமானத்தை கொடுக்கும்.