பெட்ரோல் பங்க்கில் நடைபெறும் ‘ஜம்ப் டிரிக்’ மோசடி பற்றி தெரியுமா? எப்படி நடைபெறுகிறது?
Petrol Pump Scam Alert: பெட்ரோல் பங்க்குகளில் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஜம்ப் டிரிக் மோசடி என்ற பெயரில் யாரும் கவனிக்காத வகையில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மோசடி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
நாம் ஒவ்வொரு நாளும் பைக்கோ அல்லது கார் மூலமாக பெட்ரோல் பங்க்கிற்கு (Petrol Bunk) சென்று பெட்ரோலோ அல்லது டீசலோ (Diesel) நிரப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களின் அனுபவங்கள், எரிபொருளின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் பங்க்குகளைத் தேர்ந்தெடுத்து பெட்ரோல் நிரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் சில சமயங்களில், பெட்ரோல் பங்க்குகளில் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் மோசடி (Scam) செய்கிறார்கள் என்ற புகார்கள் தொடர்ந்து எழுகின்றன. சில நேரங்களில் இது வாக்குவாதமாகவும், சண்டையாகவும் மாறிவிடுகிறது. சமீப காலமாக பெட்ரோல் பங்க்குகளில் வாடிக்கையாளர்கள் எரிபொருளின் தரம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடுவம் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் ஜீ நியூஸில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் பெட்ரோல் பங்க்குளில் நடைபெறும் மோசடிகளை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
இதை தவிர்க்க, பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் போது மீட்டரில் காணப்படும் நம்பர் ‘0’வில் இருந்து துவங்குகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்பது அரசின் பொதுவான அறிவுரையாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது இதை மட்டும் கவனிப்பது போதுமானதல்ல. காரணம், தற்போது ‘ஜம்ப் டிரிக்’ எனும் புதிய மோசடி முறையை சில பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஜம்ப் டிரிக் மோசடி எப்படி நடைபெறுகிறது?
பொதுவாக, மீட்டரில் 0.00 என துவங்க வேண்டும். ஆனால் ‘ஜம்ப் டிரிக்’ பயன்பாட்டில், 0க்கு பிறகு நேரடியாக 5 அல்லது 10 என மாறுகிறது. அதாவது 1, 2, 3, 4 ஆகிய எண்ணிக்கைகள் காட்டாமல் நேரடியாக 0வில் இருந்து 5 அல்லது 10 ஆக மாறுகிறது. இது நீங்கள் கவனிக்காமல் விட்டால் நீங்கள் கட்டும் பணத்திற்கு குறைவான பெட்ரோல்/டீசல் நிரப்பப்படும்.
எரிபொருளின் அடர்த்தியையும் கவனிக்க வேண்டும்
மேலும், பெட்ரோல் மற்றும் டீசலின் அடர்த்தி (Density) குறித்த விவரமும், எண்ணிக்கை மற்றும் தொகை காட்டும் டிஸ்பிளேவில் மூன்றாவது வரிசையில் காணப்படும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் குறைந்த தரமான எரிபொருள் வழங்கப்படுவதும் நடைபெறுகிறது.
புகார் அளிக்க வேண்டிய இடம்
இதேபோன்ற மோசடியை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என்றால், உடனே உரிய எண்ணிற்கு புகார் அளிக்கலாம்:
-
இந்தியன் பெட்ரோலியத்தின் டோல் ஃப்ரீ எண்: 1800-22-4344
-
ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் டோல் ஃப்ரீ எண்: 1800-2333-555
-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டோல் ஃப்ரீ எண்: 1800-2333-555
அதேபோல், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் (Ministry of Personnel, Public Grievances & Pensions) அதிகாரப்பூர்வ இணையதளமான https://pgportal.gov.in -ல் புகாரை பதிவு செய்யலாம். புகாரின் அடிப்படையில், மேற்கொள்ளப்படும் விசாரணையில் தவறு கண்டறியப்பட்டால் பெட்ரோல் பம்பின் உரிமம் ரத்து செய்யப்படும்.