Pan Card: இந்த தவறுகளால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் – எப்படி தவிர்ப்பது?
PAN Card Mistake Alert : வருமான வரி செலுத்துவதற்கு மட்டுமல்லாமல், வங்கி, முதலீடு, சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கடன் பெறுதல் மற்றும் பிற நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு அவசியமாகிறது. இந்த நிலையில் பான் கார்டில் நாம் செய்யும் தவறுகளால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த கட்டுரையில் அபராதம் விதிக்கப்படாமல் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் பான் கார்டு(Pan Card) என்பது தனி நபர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாகும். குறிப்பாக வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு பான் கார்டு தேவை மிகவும் அவசியமானது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் செய்யும் முக்கியமான தவறு காரணமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். உதாரணமாக ஒருவரின் பான் கார்டு செயலிழந்து போனால் அவர்கள் மீது வருமான வரித்துறை (Income Tax Department) தற்போது கடுமையான நடவடிக்கை எடுக்கும். அத்தகைய நபர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். பலருக்கு தங்கள் பான் கார்டு இனி செல்லாது என்பது தெரியாது, எனவே அவர்கள் முன்பு போலவே அதைப் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற தவறுகளுக்கு வருமான வரித்துறை அபராதம் விதிக்கக் கூடும். இந்தியா டுடேவில் வெளியான கட்டுரையின் படி பான் கார்டில் நாம் செய்யும் தவறுகளால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பான் கார்டை தவறாக பயன்படுத்தினால் விதிக்கப்படும் அபராதம்
வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கு மட்டுமல்லாமல், வங்கி, முதலீடு, சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கடன் பெறுதல் மற்றும் பிற நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு அவசியமாகிறது. ஒருவரின் பான் கார்டு செயலிழந்து, அந்த நபர் அதை தெரியாமல் பயன்படுத்தினால், வருமான வரித் துறையின் பிரிவு 272B இன் கீழ் அவருக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படாதபோது அல்லது இணைக்கும் செயல்முறை முழுமையடையாமல் இருக்கும்போது அது செயலற்றதாகிவிடும். அனைத்து பான் கார்டுகளையும் ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என்று அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், அது செயலிழக்கும்.
எப்படி தவிர்ப்பது?
உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் அறிய விரும்பினால், வருமான வரித் துறையின் இணையதளமான https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/verifyYourPAN என்ற பக்கத்திற்கு சென்று, உங்கள் பான் கார்டு எண், பிறந்த தேதி, பான் கார்டில் உள்ளது படி உங்கள் பெயர், மொபைல் எண் ஆகிவற்றை கொடுத்து Validate என்பதை கிளிக் செய்யவும். அப்போது ஓடிபி கேட்கும். உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணைக் கொடுக்கவும். அப்போது ஸ்கிரீனில் உங்கள் பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என்பதைக் காட்டும்.
ஒருவேளை உங்கள் பான் கார்டு செயலிழந்ததாகக் காட்டினால், உடனடியாக அதனை ஆதாருடன் இணைக்கவும். மேலும், தவறுதலாக உங்களிடம் இரண்டு பான் எண்கள் இருந்தால், அவற்றில் ஒன்றை ஒப்படைக்கவும். இந்த செயல்முறையை நீங்கள் NSDL என்ற தளத்தின் வழியாக செய்யலாம். ஒருவரிடம் ஒன்றிற்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால் அதற்காக வருமானவரித்துறை ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.