“ஈரானுடன் வணிகத் தொடர்பு!”.. இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீது தடை விதித்த அமெரிக்கா!!
US Sanctions Indian Companies: ஈரானுடன் பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவின் 4 நிறுவனங்கள் மற்றும் 3 இந்தியர்கள் மீது அமெரிக்கா அதிரடிப் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. "ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்" திட்டத்தின் கீழ் சுமார் 119 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகளைச் சுட்டிக்காட்டி அமெரிக்க நிதியமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரானின் பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்தும் நோக்கில், அந்நாட்டுடன் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இந்தியாவில் செயல்படும் நான்கு பிரபல நிறுவனங்கள் மற்றும் மூன்று இந்திய குடிமக்கள் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் நிதியமைச்சகம் இணைந்து “ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்” என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
இதையும் படிக்க: இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரா சீரமைத்த 120 ஆண்டு பழமையான சொகுசு மாளிகை!
தடை விதித்த அமெரிக்கா:
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களின் பட்டியலில் போர்ட்ஈஸ் பார்ட்னர்ஸ் எல்.எல்.பி, சதாசிவா ஓவர்சீஸ் லிமிடெட், பி.பி. சாஃப்ட்டெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிரகிருதீஸ் இன்ஃப்ரா இம்பேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் சேர்த்து, போர்ட்ஈஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பங்காளிகளான ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி, இந்திரிஸ்மியா அஷ்ரஃப்மியா ஷேக் மற்றும் பி.பி. சாஃப்ட்டெக் நிறுவனத்தின் இயக்குநர் பிரஷாந்த் கார்க் ஆகிய மூன்று இந்திய வணிகர்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
வணிகத்திற்கு உதவியதாக குற்றச்சாட்டு:
ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் வணிகத்திற்கு உதவியதாக இந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2024 பிப்ரவரி முதல் 2025 ஜூன் வரையிலான காலத்தில் சுமார் 6.9 கோடி டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை சதாசிவா ஓவர்சீஸ் நிறுவனம் இறக்குமதி செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் பி.பி. சாஃப்ட்டெக் மற்றும் பிரகிருதீஸ் இன்ஃப்ரா இம்பேக்ஸ் நிறுவனங்கள் தலா 2.5 கோடி டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும், போர்ட்ஈஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் சுங்கத் தரகராகச் செயல்பட்டு இந்தச் சரக்குகளை இந்தியாவிற்குள் கொண்டுவரத் துணை நின்றதாகவும் அமெரிக்க அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
சொத்துக்கள் அமெரிக்காவில் இருந்தால் முடக்கம்:
ஈரானின் நிதி ஆதாரங்களை முழுமையாக முடக்குவதையும், சர்வதேச அளவில் அந்நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுப்பதையும் அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நபர்களின் சொத்துக்கள் அமெரிக்காவில் இருந்தால் அவை முடக்கப்படும் என்றும், அமெரிக்க வணிக அமைப்புகள் இவர்களுடன் எந்தவித நிதிப் பரிவர்த்தனையிலும் ஈடுபடத் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஈரானிய நிதியமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் மற்றும் சர்வதேச அரசியலில் இந்தத் தடை நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் கவலை:
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து உலகளவில் பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க நிதியமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, ஈரானுடன் தொடர் நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் அமைப்புகள் அனைத்தும் அமெரிக்க டாலர் சார்ந்த உலகளாவிய நிதியமைப்பில் இருந்து முழுமையாக நீக்கப்படும் அபாயத்தைச் சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான தடைகளுக்கு மத்தியிலும், சீனா, ஹாங்காங், துருக்கி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது இந்த புதிய தடைகள் பாய்ந்துள்ளன.
இதையும் படிக்க: “279 உயிர்களை பலிகொண்ட கொடூரம்!” – இலங்கை ஈஸ்டர் சூசைட் பாம் தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22-ல் வெளியீடு!
வர்த்தகத்தில் பெரும் சவால்கள்:
அதேவேளையில், இறையாண்மை கொண்ட எந்தவொரு நாடும் இத்தகைய ஒருதரப்புப் பொருளாதார தடைகளையும், அமெரிக்காவின் சர்வதேச ஆதிக்கத்தையும் ஏற்காது என்றும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்ள 2 ஆண்டுகளுக்கான சிறப்புப் பொருளாதாரத் திட்டம் தயாராக இருப்பதாகவும் ஈரானிய நிதி அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் சப்ளை சங்கிலியில் பெரும் சவால்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.