“279 உயிர்களை பலிகொண்ட கொடூரம்!” – இலங்கை ஈஸ்டர் சூசைட் பாம் தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22-ல் வெளியீடு!
Sri Lanka Easter Bombings Case: 2019-ல் இலங்கையில் 279 பேரின் உயிரைப் பறித்த ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் வழக்கில் செப்டம்பர் 22-ல் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 24 பிரதிவாதிகள் மீதான 547 நாட்கள் நடந்த விசாரணையில் 2,300-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இத்தீர்ப்பு வெளியாகவுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய கொடூர ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை படை தாக்குதல் குறித்த முதன்மை குற்றவியல் வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22-ஆம் தேதி வழங்கப்படும் என்று கொழும்பு உயர் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 279 பேரின் உயிரைப் பறித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில், சுமார் 547 நாட்கள் நடைபெற்ற தொடர் விசாரணைக்குப் பிறகு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பு தேதியை உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்க: இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரா சீரமைத்த 120 ஆண்டு பழமையான சொகுசு மாளிகை!
தற்கொலை தாக்குதலில் 279 பேர் பலி:
2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் திருநாளின் போது, கொழும்பில் உள்ள மூன்று முக்கியக் தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) என்ற தீவிரவாத அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 279 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். ஆரம்பத்தில் 25 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்ததால் 24 பிரதிவாதிகள் மீது அக்டோபர் 2021-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டு:
இவ்வழக்கில் சதித்திட்டம் தீட்டுதல், தீவிரவாத தாக்குதலுக்கு உதவி புரிதல், ஆயுதங்களைச் சேகரித்தல் உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சுமத்தியுள்ளது. இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாக முகமது இப்ராஹிம் முகமது நௌஃபர் (நௌஃபர் மவுலவி) சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஷாங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி மாண்ட இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன் சஹ்ரான் ஹாஷிமுடன் நௌஃபருக்கு இருந்த தொடர்புகளையும் புலனாய்வுத் துறையினர் விரிவாக ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
தடயங்கள், ஆதாரங்கள் சமர்ப்பிப்பு:
சுமார் 2,309 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, 2,000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் தடயங்கள் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மூன்று நீதிபதிகள் அமர்வு தங்களது தீர்ப்பை வெளியிடத் தயாராகியுள்ளது. முன்னதாக, முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைக் கவனிக்கத் தவறிய குற்றத்திற்காக அப்போதைய காவல்துறைத் தலைவர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிக்க: இலங்கையில் பேரதிர்ச்சி.. செம்மணியில் தோண்ட தோண்ட வந்த 582 மனித எலும்புக்கூடுகள்.. மரண ரகசியத்தின் பின்னணி என்ன!
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு:
மேலும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், நேரடித் தாக்குதலில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகள் மீதான பிரதான வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22 அன்று வெளியாக இருப்பது இலங்கையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.