Donald Trump : ஈரான் சமாதானத்துக்கு முன்வர வேண்டும்.. இல்லையென்றால் எதிர்காலத்தில் தாக்குதல்கள் மிக கடுமையாக இருக்கும் என டிரம்ப் எச்சரிக்கை!
Trump Warns of Stronger Strikes on Iran | ஈரான் இஸ்ரேல் இடையே மிக கடுமையான மோதல் நீடித்து வரும் நிலையில், நேற்று (ஜூன் 21, 2025) அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், செய்தியாளார்களை சந்தித்த டிரம்ப் ஈரான் சமாதானத்துக்கு முன்வரவில்லை என்றால் எதிர்காலத்தில் தாக்குதல்கள் மிக கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஜூன் 22 : ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை (America Attack on Iran Nuclear Plants) தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (American President Donald Trump), ஈரான் சமாதானத்துக்கு முன்வரவில்லை என்றால் எதிர்காலத்தில் தாக்குதல்கள் மிக கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிரம்பின் இந்த எச்சரிக்கை அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பு விவகாரம் – மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் ஈரான் – இஸ்ரேல்
அணு ஆயுத தயாரிப்பு தொடர்பாக ஜூன் 13, 2025 அன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் ரைசிங் லையன் (Operation Rising Lion) என்ற பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட நிலையில், ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3 (Operation True Promise 3) என்ற பெயரில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவும் ஈரானுக்கு எதிரான தனது கருத்துக்களையும், எச்சரிக்கைகளையும் பதிவிட்டு வருகிறது.




அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்ட வெள்ளை மாளிகளை அடுத்த இரண்டு வாரங்களில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்தி டிரம்ப் முடிவு செய்வார் என அறிவித்தது. இந்த நிலையில், வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியான ஒருசில நாட்களிலேயே அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப்
President Donald J. Trump Delivers Address to the Nation, June 21, 2025 https://t.co/yutRDvtWv0
— The White House (@WhiteHouse) June 22, 2025
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், சில நேரத்திற்கு முன்பு அமெரிக்கா ராணுவம் ஈரானின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்கள் மீது மிகப்பெரிய துல்லியமான தாக்குதலை நடத்தியது. பர்தவ், நடான்ஸ், மற்றும் எஸ்பஹான் ஆகிய இந்த பெயர்களை மக்கள் பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டே இருந்தனர். இவை அனைத்தும் மிக பேரழிவை ஏற்படுத்த கூடிய திட்டத்தின் பகுதிகளாக இருந்தன.
எங்கள் நோக்கம் ஈரானின் யுரோனியம் செறிவூட்டும் திறனை அழிப்பது மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் உலகின் முதல் நிலை நாடாக கருதப்படும் ஈரானால் உருவாகும் அணு ஆயுதத்தை தடுப்பதே ஆகும் என்று கூறியுள்ளார். மேலும் மத்திய கிழக்கு பகுதியில் மிரட்டல் விடுத்து வரும் ஈரான் சமாதானத்துக்கு முன்வர வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் எதிர்காலத்தில் தாக்குதல்கள் மிக கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.