Parle-G: 5 ரூபாய் பிஸ்கெட் விலை ரூ.2,342.. 500 மடங்கு அதிகம்.. ஷாக் கொடுக்கும் காஸாவின் கோர முகம்!
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தாக்கமாக, காஸாவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்தியாவில் ரூ.5க்கு கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட், காஸாவில் ரூ.2,342க்கு விற்பனையாகிறது. உணவுப் பொருட்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலையில் விற்பனையாவதால், மக்கள் கடும் சிரமங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்தியாவில் ரூ.5க்கு விற்பனை செய்யப்படும் பார்லே-ஜி பிஸ்கட் ரூ.2,342க்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பார்லே நிறுவன தயாரிப்புகள் இந்தியாவில் மிக பிரபலமாக இருந்து வருகிறது.இப்படியான நிலையில் பார்லே ஜி பிஸ்கட்டுகள் 24 யூரோக்களுக்கு (ரூ. 2,342) விற்கப்படுவதாக காஸாவிலிருந்து வெளியான ஒரு பதிவு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அசல் விலையை வைத்து பார்த்தால் காஸாவில் இந்த பிஸ்கட்டின் விலை 500 மடங்கு அதிகமாகும். போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு பஞ்சம் நிலவி வரும் நிலையில் தற்போது விற்கப்படும் பிஸ்கட் விலை பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பதிவு




After a long wait, I finally got Ravif her favorite biscuits today. Even though the price jumped from €1.5 to over €24, I just couldn’t deny Rafif her favorite treat. pic.twitter.com/O1dbfWHVTF
— Mohammed jawad 🇵🇸 (@Mo7ammed_jawad6) June 1, 2025
சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள ஒரு பதிவில் முகமத் ஜாவத் என்பவர் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இன்று என்னுடைய மகள் ரவிப்புக்கு பிடித்த பிஸ்கட்டை வாங்கினேன் இதன் விலை 1.5 யூரோக்களில் இருந்து 24 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தாலும் அவளுக்கு பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, காஸாவிற்கு உணவு கிடைப்பது தொடர்ச்சியாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் மே 19 வரை பாலஸ்தீனப் பகுதி கிட்டத்தட்ட முழுமையாக தடை செய்யப்பட்டதால் உணவுப் பொருட்களை மக்கள் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான மனிதாபிமான லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
கருப்பு சந்தைக்கு செல்லும் உணவுப்பொருட்கள்
பார்லே-ஜி சுமார் 4,300 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஒரு நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் இதற்கு மட்டும் இந்த விலையேற்றம் என்பது கிடையாது என சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பொருட்கள் பொதுவாக மனிதாபிமான உதவியாக மட்டுமே இலவசமாக காஸா பகுதிக்குள் நுழைகின்றன. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அவை கிடைக்கப்பெறுகிறது.
உணவுப் பற்றாக்குறை அவற்றை அதிக விலை கொண்ட கறுப்புச் சந்தைப் பொருட்களாக மாற்றுகிறது என அந்த நகரத்தைச் சேர்ந்த 31 வயதான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கலீத் அல்ஷாவா NDTV தளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வெவ்வேறு இடங்களில் விற்பனையாளர் யார் என்பதைப் பொறுத்து வெவ்வேறு விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றது எனவும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள் என்பதால் விலை பாக்கெட்டில் குறிப்பிடப்படுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.