மூத்த குடிமக்களை குறிவைத்து 2 மில்லியன் டாலர் மோசடி.. அமெரிக்காவில் கைதான இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்..
Crime: அமெரிக்காவில் மூத்த குடிமக்களை குறிவைத்து போலி அரசு அதிகாரிகளாக நாடகமாடி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 33 வயதான பிரணவ் படேல் கைது செய்யப்பட்டு 75 மாத சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

அமெரிக்கா முழுவதும் மூத்த குடிமக்களை குறி வைத்து கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் (2 Million USD) மோசடியில் ஈடுபட்டதற்காக 33 வயதான இந்திய இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரணவ் பட்டேலுக்கு 75 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃப்லோரிடா (Florida) டம்பாவில் இருக்கும் பெடரல் நீதிபதி வில்லியம் ஜங் இந்த தண்டனையை வழங்கினார். நியூ ஜெர்ஸியில் வசிக்கும் பிரணவ் பட்டேல் (Pranav Patel) சர்வதேச அழைப்பு மையங்களால் திட்டமிடப்பட்ட ஒரு சிக்கலான மோசடி நடவடிக்கையில் கூட்டாளியாக செயல்பட்டார். அமெரிக்காவில் இருக்கும் மூத்த குடிமக்களை குறி வைத்து, அவர்களை மிரட்டி பணம் மற்றும் தங்கத்தை எடுத்து வர பிரணவ் பட்டேல் ப்ளோரிடா உட்பட கிழக்கு கடற்கரை முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தண்டனை வழங்கும் பொழுது பட்டேல் மற்றும் அவரது கூட்டாளிகளும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஏமாற்றி பெற்ற 1.79 மில்லியன் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி?
நீதிமன்ற ஆவணங்களின்படி பட்டேலும் அவரது கூட்டாளியும் அமெரிக்கா கருவூலத்துறை அல்லது அரசு நிறுவனங்களின் அதிகாரிகளாக தங்களை போலியாக அடையாளம் காட்டி மூத்த குடிமக்களிடம் மிரட்டி செய்யாத குற்றத்திற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொய்யாக தெரிவித்துள்ளனர். அதோடு சட்ட நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக அவர்கள் பணத்தை அல்லது தங்களது மதிப்பு மிக்க பொருட்களை ஒப்படைக்குமாறும் பட்டேல் மற்றும் கூட்டாளியினர் வற்புறுத்தியுள்ளனர். கைது வாரண்டிலிருந்து தப்பிக்க மூத்த குடிமக்கள் தங்களது சேமிப்பு பணத்தை தங்கத்தை உட்பட மதிப்பு மிக்க பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் தங்கம் இருப்பதாக ஒரு பையை எடுக்க பட்டேல் சென்றுள்ளார். அவர் கண்காணிக்கப்படுகிறார் என்பதை உணராமல் அந்த பையை எடுத்த சில நிமிடங்களிலேயே சட்ட அமலாக்க அதிகாரிகள் பட்டேலை கைது செய்துள்ளனர். வயதான மக்களிடம் இருந்து அவர்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்தது வெறுக்கத்தக்கது என தண்டனைக்கு பிறகு ரகசிய சேவை சிறப்பு முகவர் ராபர்ட் ஏஞ்சல் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த குற்ற செயல்களின் போது பிரணவ் பட்டேல் உள்ளிட்டோர் தங்களை அரசாங்க அதிகாரிகளாக காட்டிக் கொண்டு ஏமாற்றி மூத்த குடிமக்களை கைது செய்யப்படுவார்கள் என அச்சுறுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சாட்சி அளித்த ஒருவர் இந்த மோசடியில் தனது அடமானத்தை செலுத்த முடியாமல் போனதாகவும் இறுதியில் வேறு வழியின்றி தனது வீட்டை அடமானம் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். டிசம்பரில் பிரணவ் பட்டேல் பண மோசடி மோசடி நடவடிக்கையில் தனது பங்கை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.