பாகிஸ்தானில் தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல் – 13 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Pakistan Suicide Bombing : பாகிஸ்தானின் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் நடைபெற்ற தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர், இதில் பொதுமக்கள் மற்றும் போலீசாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை பாகிஸ்தான் தலிபானின் ஹஃபிஸ் குல் பகதூர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானின் (Pakistan) வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில், திடீரென நடைபெற்ற தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலில் (suicide Attack) 13 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் 29 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக காயமடைந்தவர்களில் 10 பேர் இராணுவத்தினர், 19 பேர் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் என கூறப்படுகிறது. இந்த தாக்குதல் கைபர் பக்தூன்குவா மாநிலம் சார்ந்த பகுதிகளில் நடந்துள்ளது. வெடிகுண்டுடன் கூடிய வாகனத்தை இயக்கிய ஒருவர் இராணுவ வாகனத்தின் மீது மோத செய்து தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த அரசு அதிகாரி, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்களை வழங்கியவர், ஊடகத்திடம் பேச அனுமதி இல்லாததால் தன்னுடைய பெயரை மறைக்க கோரியுள்ளார்.
வீடுகள் இடிந்து 6 குழந்தைகள் படுகாயம்
தாக்குதலின் விளைவாக, அருகிலிருந்த இரண்டு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன. இதில் ஆறு குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்று அந்த மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த நான்கு படைவீரர்களின் உடல் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.




தற்கொலை தாக்குதல் குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பதிவு
#UPDATE “A suicide bomber rammed an explosive-laden vehicle into a military convoy. The blast killed 13 soldiers, injured 10 army personnel and 19 civilians,” said a local government official in North Waziristan district of Khyber Pakhtunkhwa province, Pakistan. pic.twitter.com/Vw6Iu0Iydd
— AFP News Agency (@AFP) June 28, 2025
இந்த தாக்குதலை, பாகிஸ்தான் தலிபான்கள் சார்ந்த ஹஃபிஸ் குல் பகதூர் குழுவின் தற்கொலை படை பிரிவு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாகிஸ்தானின் எல்லை பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இத்தாக்குதல்களில் பெரும்பாலானவை பாகிஸ்தான் அரசு மற்றும் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து நடத்தப்படுகின்றன.
குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கைபர் பக்தூன்குவா மற்றும் பலூசிஸ்தான் பகுதிகளில் மட்டும் 290 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் இத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று ஏஎஃப்பி தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தத் தாக்குதல், பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சவால்களையும், பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகளையும் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளும் இத்தகைய தாக்குதல்களின் நேரடியாக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் என்பது மிகவும் வேதனைக்குரியது. இது போன்ற சம்பவங்கள், பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்பையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதிக்கின்றன.