யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா என்ற குழப்பத்திற்கு மத்திய அரசு முக்கிய விளக்கம் அளித்துள்ளது. யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் எந்தவித பரிவர்த்தனை கட்டணமும் வசூலிக்கப்படாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு சந்தேகங்களுக்கும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா என்ற குழப்பத்திற்கு மத்திய அரசு முக்கிய விளக்கம் அளித்துள்ளது. யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் எந்தவித பரிவர்த்தனை கட்டணமும் வசூலிக்கப்படாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா?
மேலும், எதிர்காலத்தில் வணிகர் தள்ளுபடி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டால், அது அனைத்து வணிகர்களுக்கும் பொதுவாக விதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நடைபெறும் சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, குறைந்த அளவிலான எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படலாம். மேலும், இந்தக் கட்டணம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை விட மிகவும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், யுபிஐ மூலம் நடைபெறும் பெரும்பாலான பரிவர்த்தனைகள் வணிகர்களுக்கும் தொடர்ந்து கட்டணமின்றியே இருக்கும். எம்டிஆர் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்பின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் பொதுவாக விதிக்கப்படாது. இதற்கான அடுத்தகட்ட முடிவு, நாடாளுமன்றத்தில்வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் 2026 நிறைவேற்றப்பட்ட பிறகு எடுக்கப்படும்.
எம்டிஆர் கட்டணங்களைச் செயல்படுத்துவது குறித்த முடிவு இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் கீழ் உள்ள யுபிஐ சேவைகள் வழிநடத்தல் குழுவின் வசம் உள்ளது. இந்தியா யுபிஐ கட்டண முறையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகவும், கிராமப்புறங்களில் இச்சேவையை விரிவுபடுத்த இம்முறை சுயசார்பு கொண்டதாக மாற வேண்டும் என்றும் நிதியமைச்சகம் குறிப்பிட்டது.
இது தொடர்பாக பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தமானது, யுபிஐ பாதுகாப்பானதாகவும், சமமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அது தெளிவுபடுத்தியது.
கடந்த 2016 – 17 இல் தொடங்கப்பட்ட யுபிஐ அமைப்பு, காலப்போக்கில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. மேலும் கடந்த ஜூலை 2026ல், ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது, 11 நாடுகளில் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது; மேலும் பல நாடுகள் இம்முறையுடன் இணைய முன்வந்து கொண்டிருக்கின்றன.