பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.. “நிலைமையை உணராத இபிஎஸ்”.. எஸ்.பி.வேலுமணி பகிரங்கக் குற்றச்சாட்டு!!
மிக முக்கியமாக, அதிமுகவின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக வேலுமணி அறிவித்துள்ளார். மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அரசியல் அறத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியைப் பிரிக்கும் எண்ணம் தங்களுக்கு யாருக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவுக்குள் புகைந்து கொண்டிருந்த அதிருப்தி தற்போது பகிரங்க மோதலாக வெடித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட நீண்ட அறிக்கைக்குப் பதிலடியாக, எஸ்பி வேலுமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, கழகப் பொதுச் செயலாளர் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 1.31 கோடி மகளிர்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை… வங்கி கணக்கில் வரவு வைப்பு!
அனைவரிடம் பேசியிருக்க வேண்டும்:
கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை.
ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள்…
— SP Velumani – Say YES to AIADMK (@SPVelumanicbe) May 15, 2026
எடப்பாடியாரின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், தேர்தல் கூட்டணி மற்றும் கட்சிச் செயல்பாடுகள் குறித்து யாரிடமும் ஆலோசிக்காமல், எடப்பாடி பழனிசாமி மிகவும் தனிச்சையாகச் செயல்பட்டார் என்று வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். தோல்வி வந்த பிறகு ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து அனைவரிடமும் பேசியிருக்க வேண்டும்.
ஆனால், “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருவதாக அவர் கூறியுள்ளார்.
மக்களின் தீர்ப்பை மதித்து தவெகவுக்கு ஆதரவு:
மிக முக்கியமாக, அதிமுகவின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக வேலுமணி அறிவித்துள்ளார். மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அரசியல் அறத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியைப் பிரிக்கும் எண்ணம் தங்களுக்கு யாருக்கும் இல்லை என்று குறிப்பிட்ட வேலுமணி, எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். “தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ‘போங்க போங்க’ என்று எப்போதும் போல விரட்டியடிக்காமல், ‘வாங்க வாங்க’ என்று ஒருமுறை அழைத்துப்பாருங்கள். அப்போது எல்லாம் மாறும். இப்போதும் நீங்கள் அழைத்தால் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம்”.
இதையும் படிக்க: எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!
அதிமுகவின் எதிர்காலத்தை சேர்ந்து தீர்மானிப்போம்:
தோல்விக்கான காரணங்களை அனைவரும் ஒன்றிணைந்து ஆராய வேண்டும் என்றும், கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்பி வேலுமணி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அதிமுகவின் எதிர்கால அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.