Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் கொடூரம்.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

Karur TVK Rally Stampede : கரூர்  மாவட்டத்தில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நேற்று நடந்த  தமிழக வெற்றிக் கழக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

கரூர் கொடூரம்.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 28 Sep 2025 11:58 AM IST

கரூர், செப்டம்பர் 28 :  கரூர்  மாவட்டத்தில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நேற்று நடந்த  தமிழக வெற்றிக் கழக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த துயர சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் காயம் அடைந்தவர்களுக்கு  தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான்.

Also Read : கரூரில் பெருந்துயரம்.. ரத்து செய்யப்படுகிறதா விஜயின் பரப்புரை? அடுத்த பிளான் என்ன?

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம்


இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்றார். இதற்கிடையில்,  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Also Read : கரூர் துயரம்.. த.வெ.க மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

அதோடு, தவெக அலுவலகத்திற்கும், விஜயின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கரூரில் நடந்த துயர சம்பவத்தை அடுத்து, விஜய், அடுத்த வாரம் நடைபெற இருந்து பிரச்சார பயணத்தை ரத்து செய்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாட தவெக தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.