வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா: திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்!
Velankanni special train: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்க திருவனந்தபுரம் வடக்கு - வேளாங்கண்ணி இடையே ஆகஸ்ட் 29 முதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 20 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 20 முதல் தொடங்குகிறது.
நாகப்பட்டினம், ஆகஸ்ட் 19: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேராலயத் திருவிழாவை முன்னிட்டுப் பக்தர்களின் வசதிக்காகவும், வழித்தடங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் திருவனந்தபுரம் வடக்கு மற்றும் வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிக்க: 15 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு.. சென்னை பறக்கும் ரயில் சேவை மெட்ரோவுடன் இணைப்பு..
வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில்:
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருவனந்தபுரம் வடக்கு – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06115) ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய சனிக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலானது திருவனந்தபுரம் வடக்கிலிருந்து இரவு 7:35 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8:40 மணிக்கு வேளாங்கண்ணி நிலையத்தைச் சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி – திருவனந்தபுரம் வடக்கு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06116) ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 7:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 பெட்டிகள் இணைக்க ஏற்பாடு:
இந்தப் பேராலயத் திருவிழா சிறப்பு ரயிலில் பயணிகளின் வசதிக்காக 3 குளிர்சாதனப் பெட்டிகள், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இந்தச் சிறப்பு ரயில்கள் இரு வழிகளிலும் நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதையும் படிக்க: ”கண் முன் வந்த கரூர் சம்பவம்!”.. மாநாட்டில் 3 நிமிடத்தில் உரையை முடித்தது ஏன்? திருமாவளவன் உருக்கமான விளக்கம்!!
நாளை முன்பதிவு தொடக்கம்:
கேரளா மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவிற்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை பெரும் பயனுள்ளதாக அமையும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 20-ஆம் தேதி காலை 8:00 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.