ஒன்டே ட்ரிப் போகனுமா.. தர்மபுரியில் இருந்து ஒரு மணி நேரம் தான்.. 25 கொண்டை ஊசி வளைவுகளுடன் திரில்லிங்கான அனுபவம்!
Vathalmalai Tourist Spot: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை சிறந்து சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. ஒன்டே ட்ரிப் செல்ல வேண்டும், அதுவும் குறைந்த தூரத்தில் விரைவாக செல்ல வேண்டும் என்றால் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை தேர்வு செய்யலாம் .
தமிழகத்தில் கோடை கால சுற்றுலா செல்வதற்கு சுற்றுலா பயணிகள் தற்போது திட்டமிடத் தொடங்கி இருப்பார்கள். இதில், ஒன்டே ட்ரிப் செல்லும் வகையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்து வருகின்றன. அதன்படி, சுற்றுலா செல்வதற்கு வத்தல் மலையை ஒரு தேர்வாக வைத்துக்கொள்ளலாம். இந்த வத்தல் மலையானது தர்மபுரி மாவட்டத்தில் அழகான மலைவாழ் இடமாக அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் மலையில் குளிர்ந்த சூழல் நிலவி வருவதுடன், செடி, கொடி, மரங்கள் என கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இயற்கை சார்ந்து காணப்படும். இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதுடன், நீலகிரி மற்றும் ஏலகிரி மலைகளின் வரிசையில் வருகிறது. ஏலகிரி மலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஆனால், இந்த வத்தல் மலையில் 25 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும்.
ஹில் வியூ பாய்ண்டுகள் – நீர் வீழ்ச்சிகள்
இது திரில்லிங்கான பயணம் மேற்கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்த மலைக்கு ட்ரிப் செல்லலாம். மேலும், இந்த மலையின் உச்சியில் நீர் வீழ்ச்சிகள், வியூ பாய்ண்டுகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்கிருந்து மலையின் அழகையும், சுற்றி உள்ள பகுதிகளின் அழகையும் கண்கூறாக கண்டு ரசிக்கலாம். வத்தல் மலையில் ஏராளமான காப்பி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த காப்பி பயிர்களுக்கு ஊடு பயிராக ஆரஞ்சு, மிளகு மற்றும் உயரமான சில்வர் ரூப் மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி அடர்ந்த காடுகள் போன்று காட்சியளிப்பதால் சுற்றிப் பார்ப்பதற்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும்.
மேலும் படிக்க: காதலர் தின ஃபீவர்…ஓசூர் ரோஜா விற்பனை படு ஜோர்…ஒரு பூவின் விலை இவ்வளவா?




சூரிய உதயம்-அஸ்தமனத்தை பார்க்க முடியும்
இந்த மலையில் அமைந்திருக்கும் ஹில் வியூ பாய்ண்டுகளில் இருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை கண்டு களிக்கலாம். இந்த மலையில், ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவும். இதே மலையின் மீது அண்ணாமலையார் என்ற கோவிலும் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்புகள் உடைய இந்த வத்தல் மலை தர்மபுரி மாவட்டத்தின் “குட்டி ஊட்டி” என்று அழைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் இந்த வத்தல் மலைக்கும் சுற்றுலா செல்லலாம்.
25 கிமீட்டரில் ஒன் டே ட்ரிப்
இங்கு செல்வதற்கு தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து காலை, மதியம், மாலை என 3 வேளைகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவுடைய இந்த வத்தல் மலைக்கு சுமார் 1:30 மணி நேரத்தில் சென்றடையலாம். எனவே, கோடை கால சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது சுற்றுலா திட்டத்தில் இந்த வத்தல் மலையையும் இணைத்து கொள்ளலாம். இங்கு மேற்கொள்ளப்படும் சுற்றுலா பயணம் திரில்லிங்கான உற்சாகத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க: காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!