தோட்டத்து வீடு கொலைகள்.. ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் காரணமா? – வானதி

BJP's Vanathi on Tamil Nadu: திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மத்திய அரசின் சாதனைகள், கீழடி அகழ்வாய்வு, அண்ணாமலையின் கருத்து, மற்றும் தமிழக திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். மோடி அரசின் நலத்திட்டங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடு, கீழடி விவகாரத்தில் திமுகவின் அரசியல், மற்றும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு குறித்தும் அவர் பேசினார்.

தோட்டத்து வீடு கொலைகள்.. ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் காரணமா? - வானதி

எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

Published: 

15 Jun 2025 07:10 AM

திருப்பூர் ஜூன் 15: பாரதிய ஜனதா கட்சியின் (Bharathi Janatha Party) தேசிய மகளிரணி தலைவர் (National Women’s Team  Leader) மற்றும் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan), திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது, பா.ஜ. அரசின் சாதனைகள், கீழடி விவகாரம், தோட்டத்து கொலைகள், அண்ணாமலையின் கருத்து, மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு முக்கிய விளக்கங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், 2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ. அரசு பதவியேற்றதிலிருந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். விவசாயிகளுக்கு ரூ.6,000, கர்ப்பிணி பெண்களுக்கு நேரடி உதவித்தொகை உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் இடைத்தரகரின்றி நேரடியாக மக்களுக்கு வழங்கப்படுவதாகவும், தமிழகம் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான நலன்களை பெற்றுள்ளதாகவும் கூறினார்.

சுயதொழில் வளர்ச்சி மற்றும் மருத்துவம்

இந்தியாவில் சுயதொழில் தொடங்குபவர்கள் எண்ணிக்கையில் பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் 2045 மருத்துவக் கல்லூரிகள், 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 16,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகம் அதிகம் பயன்பெற்ற மாநிலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தோட்ட வீடுகளில் ஏற்பட்ட கொலை சம்பவங்கள் மீது சந்தேகம்

தமிழகத்தின் கொங்கு பகுதியில் தோட்ட வீடுகளில் நடைபெறும் சில கொலைச் சம்பவங்களுக்கு, ரியல் எஸ்டேட் கும்பல்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. நிலங்களை விற்கும் அவசியமில்லாத நிலையில், ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் இந்த செயல்களில் ஈடுபடலாம் என அவர் தெரிவித்தார்.

கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் விவகாரம்

கீழடி விவகாரத்தில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று குற்றம்சாட்டினார். ஆதிச்சநல்லூர், கீழடியை விட தொன்மை வாய்ந்த இடம் என்றும், அங்கு மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். மத்திய அரசுக்கு குறை சொல்ல எதுவும் இல்லாத நிலையில், கீழடியை கொண்டு அரசியல் செய்வது பொருந்தாது என தெரிவித்தார்.

திமுக ஆட்சி மீது குற்றச்சாட்டு

திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாகவும், மதுரை அருகே காவல் நிலையத்திற்கே நேர்ந்த தாக்குதல் அதை நிரூபிக்கிறது என்றும் தெரிவித்தார். மாநகராட்சி குப்பை அகற்றும் பணிகளில் கோவைக்கு பின்னர் திருப்பூரிலும் மோசமான நிலை காணப்படுவதாகவும், தமிழகம் அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் தோல்வியடைந்துவிட்டதாகவும் விமர்சித்தார்.

அண்ணாமலை கருத்து குறித்து கருத்து

தேசிய கட்சியில் தேசிய தலைமை எடுத்த முடிவுகளை அனைத்து அடிப்படை தொண்டர்களும் பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக வானதி கூறினார். தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறிய “2026-ல் பா.ஜ. ஆட்சி” என்பது அவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே என வலியுறுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தபடி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையேற்கும் என்று விளக்கம் அளித்தார்.