“யானைகள் தினத்தில் நேர்ந்த நெஞ்சை ரணமாக்கும் துயரம்!”.. ரயில் மோதி தாய், குட்டி யானைகள் பரிதாப பலி!
கோவை அருகே உள்ள தமிழக-கேரள எல்லையான வாளையாரில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் குட்டி யானை உட்பட இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்பட்ட அதே நன்னாளில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம், வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஆகஸ்ட் 13: உலகளவில் வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்பட்ட வேளையில், கோவை அருகே தமிழக-கேரள எல்லையில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தமிழக எல்லையிலிருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் வாளையார் பகுதியில், நள்ளிரவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைகள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியதில் தாய் யானை மற்றும் குட்டி யானை ஆகிய இரண்டும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சோக நிகழ்வு வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்து:
நேற்று இரவு சுமார் 11:45 மணி அளவில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், பாலக்காடு மாவட்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் நான்கு யானைகள் நின்றுகொண்டிருந்தன. அதில் இரண்டு யானைகள் பாதையிலிருந்து விலகிய நிலையில், தாய் யானை ஒன்று தனது குட்டியைத் தனியாக விட்டுச்செல்ல மனமில்லாமல் தண்டவாளத்திலேயே நின்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அதிவேகமாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக யானைகள் மீது மோதியதில், தாய் யானையும் குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தன. மற்ற இரண்டு யானைகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பின. இச்சம்பவத்தால் கோவை – கேரளா இடையேயான ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டது.
தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள்:
தமிழகப் பகுதியான மதுக்கரை வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ரூ.16 கோடி செலவில் AI கேமராக்கள் மற்றும் தெர்மல் கேமராக்கள் அமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக ட்ரோன் கண்காணிப்பு நுட்பமும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் யானைகள் தண்டவாளத்திற்கு வரும் தகவல்கள் லோக்கோ பைலட்டுகளுக்கு முன்கூட்டியே கிடைக்கப்பெற்று, தமிழக எல்லைக்குள் விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கேரள வனத்துறையினரும் தமிழகத்தின் இந்த AI கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றிருந்தனர்.
மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு சில்லென மாறப்போகும் தமிழகம்.. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..
தொடரும் விசாரணை:
ஏற்கனவே வாளையார் எல்லைப் பகுதியில் ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வந்த நிலையில், த நவீன தொழில்நுட்பங்களை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு முன்பாகவே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் கேரள வனத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எச்சரிக்கை சிக்னல்கள் ஏதேனும் முன்கூட்டியே கிடைத்திருந்ததா, அதை கவனிக்கத் தவறினார்களா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்ற பல்வேறு கோணங்களில் அம்மாநில அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.