தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேர வழக்கு.. அடுத்ததடுத்து கைதாகும் நபர்கள்.. திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி!
TVK MLAs Bribery Case : தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ க்கள் பேர வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது வாகன ஓட்டுனரான கிருஷ்ணா என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர் .
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவான இளையராஜாவிடம் அரசியல் வியூக நிறுவனத்தை சேர்ந்தவர் என கூறப்படும் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் சட்டப்பேரவை தலைவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும், எதிராக வாக்களிக்கவும் கோரி ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையகரத்தில் இளையராஜா எம்எல்ஏ புகார் அளித்தார். அதன் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து யூடியூபரான திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், ரமேஷ், கார்த்திக் உள்ளிட்ட 8 பேரை அடுத்தடுத்து கைது செய்து இருந்தனர். இந்த நிலையில், எம்எல்ஏக்கள் பேரம் விவகாரத்தில் தொடர்புடையதாக திருநாவுக்கரசுவின் கார் ஓட்டுனரான கிருஷ்ணாவை திருவல்லிக்கேணி போலீசார் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 5) கைது செய்தனர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அதிரடி விசாரணை
அவரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேர விவகாரம் தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், எம். எல். ஏ.க்கள் பேர விவகாரத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரான அசோக்குமாருக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் படிக்க: கறுப்பு பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடு.. உளுந்தூர்பேட்டையை பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம்!




செந்தில் பாலாஜி – அசோக்குமாருக்கு போலீசார் சம்மன்
அதன் அடிப்படையில், அவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று சனிக்கிழமை ( ஜூலை 4) செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை நேரில் ஆஜராக கோரி கரூர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு நேரடியாக சென்ற போலீசார் அங்கிருந்த செந்தில் பாலாஜியின் தந்தை மற்றும் தாயிடம் சம்மனை படித்து காண்பித்து அளித்துவிட்டு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நாளை திங்கள் கிழமை ( ஜூலை 6) காவல் துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் ஆஜராகுமாறு அந்த சம்மனில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரூ.180 கோடி வரை பேரம் பேசியதாக தகவல்
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்களுக்கு தனியார் நிறுவனம் ரூ.180 கோடிக்கு பேரம் பேச முயன்றதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் மேலும் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கோவையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை – அதிர்ச்சி தகவல்