டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ரத்து விவகாரம்…5 அலுவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!
TNPSC Group 2 Exam: தமிழகத்தில் நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதுடன், மேலும் 5 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) டி என் பி எஸ் சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெற இருந்தது. ஆனால், இந்த தேர்வுகளை தேர்வர்கள் ஆர்வமாக எழுதி கொண்டிருந்த நிலையில், திடீரென இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு, தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஆகியவை காரணம் என்று டி என் பி எஸ் சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்வு எழுதுவதற்காக வந்திருந்த தேர்வர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் அந்தப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
5 டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் பணியிடை நீக்கம்
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், 2 உதவி பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், 2 பிரிவு அலுவலர்கள், 1 சார் செயலர் ஆகிய 5 பெயர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துணை செயலர் மீது துரை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் காலங்களில் இது போன்ற குளறுபடிகள் ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கையாக இருப்பதுடன், கூடுதல் வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!




828 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு
ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் என்பன உள்ளிட்ட 828 காலி பணியிடங்கள் இருந்தன. இதற்கான தேர்வுகள் தான் கடந்த பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வுக்காக இரவு, பகல் பாராது தயாராகி வந்த மாணவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இந்த தேர்வு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மார்ச் 15- இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
ரத்து செய்யப்பட்ட இந்த குரூப் 2, 2 ஏ தேர்வுகள் அடுத்த மாதம் மார்ச் 15- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் எனவும், இதற்கான ஹால் டிக்கெட் வருகிற பிப்ரவரி 28- ஆம் தேதிக்குள் டி என் பி எஸ் சி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும், இதனை ஓ டி ஆர் எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒரு பிரச்சனையை சந்திக்க திறனற்றவர் விஜய்- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..