ஒரு பிரச்சனையை சந்திக்க திறனற்றவர் விஜய்- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
விஜய்க்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விஜயை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: “ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்தால் மட்டுமே என்ன நிலைமை என்பது தெரியும். தேர்தலுக்கு முன்பாக எதையும் சொல்ல முடியாது. எந்தக் கட்சி வந்தால் நன்மை கிடைக்கும் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
பிப்ரவரி 14, 2026: ஒரு பிரச்சனையை சந்திக்கத் திறன் அற்றவர் விஜய் என எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து செய்தியாளர்களை சந்தித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரப் பங்கு வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தாலும், தற்போது வரை எந்தக் கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தத் தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் தனித்து சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலத்தில் விஜய் பேசியது என்ன?
இத்தகைய சூழலில், பிப்ரவரி 13ஆம் தேதி நேற்று சேலத்தில் மக்களை சந்தித்தார் விஜய். அப்போது பல்வேறு விஷயங்களை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதில் பேசிய தலைவர் விஜய், அதிமுகவையும் கடுமையாக சாடினார்.
அப்போது பேசிய அவர், “கட்சி ஆரம்பித்த அண்ணா, எம்ஜிஆரை மறந்தது; கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தது தான் உங்கள் சாதனை. நீங்கள் எங்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்கிறீர்கள். கொள்ளை அடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை; அதையெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது” என தெரிவித்தார்.
அதே சமயத்தில், “நான் யாரையும் அழிக்க அரசியலுக்கு வரவில்லை; மக்களுக்கு நல்லது செய்யத்தான் வந்துள்ளேன். அனுபவம் இல்லை என்று தாவீகாவை விமர்சிக்கிறார்கள். அடுத்தவர்கள் தொடங்கிய அரசியல் கட்சியில், அடுத்தவர்களின் முகவரியில் அரசியல்வாதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடுக்கிறேன். சொந்தமாக ஒரு கட்சியை தொடங்கி, வாக்கு வங்கி காட்டும் திராணி இருக்கிறதா?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.
மேலும் படிக்க: மகா சிவராத்திரி…சென்னையில் இருந்து இந்த 2 ஊர்களுக்கு கூடுதல் ரயில்கள் அறிவிப்பு!
விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி:
இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விஜயை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: “ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்தால் மட்டுமே என்ன நிலைமை என்பது தெரியும். தேர்தலுக்கு முன்பாக எதையும் சொல்ல முடியாது. எந்தக் கட்சி வந்தால் நன்மை கிடைக்கும் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். பொன்விழா கொண்டாடிய கட்சி அதிமுக. இந்தக் கட்சியால்தான் தமிழகம் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிமுகவின் வரலாறு தமிழக மக்களுக்கு தெரியும்.
மேலும் படிக்க: பாஜகவின் புதுமையான பிரசாரம்.. வாசகமே கிடையாது.. வியந்த மக்கள்!!
பிரச்சனையை சந்திக்க திறனற்றவர் விஜய்:
கரூரில் ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் அந்தச் சம்பவத்தை சந்திக்காமல் 72 நாட்கள் வீட்டிலேயே இருந்தவர் விஜய். அரசியல் கட்சி தொடங்கினால் தலைவராக இருந்தால் கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள்; அதற்கு பதில் அளிக்கத் தான் ஆக வேண்டும். ஆனால் தற்போது வரை அவர் செய்தியாளர்களை சந்தித்தது கிடையாது. கேள்வி கேட்கும்போது அதற்கு பதில் சொல்ல வேண்டியது ஒரு கட்சித் தலைவரின் கடமை. அதை அவர் செய்யவில்லை. ஒரு பிரச்சனையை சந்திக்கத் திறனற்றவர் விஜய்” எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.