“அவங்க 2 பேரும் மதிமுக எம்எல்ஏக்களே இல்ல”.. பரபரப்பை கிளப்பிய துரை வைகோ!!
பிற கட்சியினரைத் தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும்போது தவெக தலைமை மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தவறான நபர்கள் கட்சிக்குள் வரும்போது மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழலாம் என்றும், இதனை தவெக தலைமை பார்த்துக் கொள்ளும் என நம்புவதாகவும் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, ஜுன் 18: திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களும் சட்டப்படி தற்போது திமுக உறுப்பினர்கள் தான் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, மதிமுக எம்எல்ஏக்களின் நிலைப்பாடு, தவெக அரசுக்கான அறிவுரை மற்றும் மதிமுகவின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்துப் பேசியிருந்தார். மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிடுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, “அவர்கள் சட்டப்படி மதிமுக எம்எல்ஏ-க்கள் கிடையாது, திமுக எம்எல்ஏ-க்கள் தான்” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் படிக்க: மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!!
தேர்தலின் போது அவர்கள் தங்களது அடிப்படை மதிமுக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுகவில் உறுப்பினராகி கார்டு (உறுப்பினர் அட்டை) வாங்கிய பிறகுதான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். எனவே, சட்ட ரீதியாக அவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களே, ஆனால் எங்களது கட்சிக்காரர்களாக அவர்கள் என் கூடத்தான் இருக்கிறார்கள் என்றும் கூறினார் .
நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் கூட்டணி முடிவு:
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற சூழ்நிலை வந்தால் என்ன நிலைப்பாடு எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, “எந்த சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து, நாம் எந்த மாதிரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை கட்சியின் தலைமை முடிவெடுக்கும்” என்றார். மேலும், கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவை ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தவெக தலைமைக்கு வேண்டுகோள்:
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமைக்கு துரை வைகோ ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். “தமிழ்நாடு மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பித்தான் தவெக-வை ஆட்சி கட்டிலில் அமர்த்தியுள்ளனர்” என்று குறிப்பிட்ட அவர், ஊழல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய பிற கட்சியினரைத் தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும்போது தவெக தலைமை மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தவறான நபர்கள் கட்சிக்குள் வரும்போது மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழலாம் என்றும், அது இயக்கத்தையே மாசுபடுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும், இதனை தவெக தலைமை பார்த்துக் கொள்ளும் என நம்புவதாகவும் துரை வைகோ தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: திடீரென குறுக்கே வந்த பைக்.. கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வாகனம்.. அடுத்து நேர்ந்த சம்பவம்..!
தவெக-விற்கு மாஸ் மைக்ரேஷன்:
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ச்சியாகப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து வருவது குறித்துப் பேசிய துரை வைகோ, “இது வெறும் நிர்வாகிகளின் மாற்றம் மட்டுமல்ல, அடித்தட்டு தொண்டர்களின் ‘மாஸ் மைக்ரேஷன்’ என்று கூறினார். தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமை எடுத்த சில கூட்டணி முடிவுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் அக்கட்சியின் தொண்டர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட அதிருப்தியாலேயே ஒட்டுமொத்தமாகத் தொண்டர்கள் தவெக-வை நோக்கிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.