கார் விவகாரத்தில் உதயநிதி – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம்..
எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்று வீடுகள் உள்ளன. அவர் ஏன் அரசு பங்களாவில் வசிக்கிறார்? அவருக்கு சொந்தமாக பங்களா இருப்பதால் அரசு பங்களா வழங்க முடியாது என்று கூற முடியுமா? நீங்கள் வேண்டுமானால் கார் இல்லை, வீடு இல்லை, கையில் ரூ.10 ஆயிரம் மட்டுமே உள்ளது என்று கூறலாம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களில் வீடும் காரும் இல்லாதவர்கள் உள்ளனர். ” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
ஆகஸ்ட் 21, 2026: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கார்கள் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த நிலையில், இதற்கு அமைச்சர் ஆதம் அர்ஜுனா பதிலளித்துப் பேசியுள்ளார். ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில்தான் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
திமுக எம்.எல்.ஏக்களுக்கு கார் வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்:
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, அரசு அறிவித்துள்ள கார்கள் திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்களுக்கும் வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இதுதொடர்பாக அனைவரும் கையெழுத்திட்ட கோப்பை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேவையற்ற அரசு செலவுகளைக் குறைக்கும் நோக்கில், பொருளாதாரத்தில் நலிவடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
முதல்வர் சொன்னது பொதுவான அறிவிப்பு – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “விசிக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் முதலமைச்சர் கார் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் செவி சாய்த்துள்ளார்” என்றார்.
மேலும் படிக்க: “கடையை திறந்தால் சர்வர் டவுன்!”.. வட்டாட்சியர் அலுவலகத்தில் PoS எந்திரங்களை ஒப்படைத்து ரேஷன் ஊழியர்கள் அதிரடி போராட்டம்!
மேலும், “எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்று வீடுகள் உள்ளன. அவர் ஏன் அரசு பங்களாவில் வசிக்கிறார்? அவருக்கு சொந்தமாக பங்களா இருப்பதால் அரசு பங்களா வழங்க முடியாது என்று கூற முடியுமா? நீங்கள் வேண்டுமானால் கார் இல்லை, வீடு இல்லை, கையில் ரூ.10 ஆயிரம் மட்டுமே உள்ளது என்று கூறலாம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களில் வீடும் காரும் இல்லாதவர்கள் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடமும் கார் இல்லை” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தொடர்ந்து, “முதலமைச்சர் பொதுவான அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், ஏற்கனவே கார் வைத்திருக்கும் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் யாரும் கார் கேட்டு விண்ணப்பிக்க மாட்டார்கள்” என்றும் அமைச்சர் கூறினார்.
கே.என்.நேரு கொடுத்த பதில்:
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, “கார் வேண்டாம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். அரசுக்கு செலவு வைக்க வேண்டாம் என்பதற்காகத்தான் கார் வேண்டாம் எனக் கூறுகிறோம். எங்களது வேட்பாளர் முடிவைக் குறிப்பிட்டுப் பேசினால் வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், “அமைச்சர் சொந்த வீட்டில் வசிக்கிறார். ஆனால், அந்த வீட்டுக்கு அரசு வாடகை செலுத்துகிறது. எனவே, வீடு வேண்டாம் என்று எழுதிக் கொடுங்கள்” என அமைச்சர் ஆதம் அர்ஜுனாவுக்கு கே.என். நேரு பதிலளித்தார்.
இதனால், சட்டப்பேரவையில் அரசு சார்பில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.