செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதே சிரமமாக உள்ளது – எஸ்.பி வேலுமணி எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி..
இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதே சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழலில், இதற்குப் பிறகு இந்த வழக்கில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
செப்டம்பர் 7, 2026: இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயன் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கு பின்னணி என்ன?
இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசு அனுப்பிய விளக்கக் கடிதம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி கிடைத்ததாகவும், அதன் மீது தற்போது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனிடையே, அனுமதி வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 27-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. கே.என். நேரு உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு.. பிடியை இறுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ்?
நீதிபதி எழுப்பிய கேள்வி:
இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஊழல் வழக்கில் அனுமதி வழங்குவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது என கேள்வி எழுப்பினார். மேலும், “இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்ற முடிவுக்கு இதுபோன்ற வழக்குகளைப் பார்த்துதான் வர வேண்டியுள்ளது. ஒரு ஊழல் வழக்கில் வழக்கு தொடருவதற்கான ஒப்புதலைப் பெற நீதிமன்றம் எவ்வளவு வற்புறுத்த வேண்டியுள்ளது?
செல்வாக்கு மிகுந்த நபர்கள் – வழக்கு விசாரிப்பது சிரமமாக உள்ளது:
இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதே சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழலில், இதற்குப் பிறகு இந்த வழக்கில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் படிக்க: பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி..
இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும், அனுமதி கோரிய கடிதத்தின் தற்போதைய நிலை குறித்தும் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பு செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.