மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த 19 வயது இளம்பெண்.. தாய் மற்றும் அண்ணன் சேர்ந்து ஆணவக்கொலை செய்த கொடூரம்..
அபி செல்வி தொடர்ந்து காதலருடன் தொடர்பில் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் சிவஞானம், இளம்பெண்ணை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையை மறைக்க, அபி செல்வி தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியதும் காவல்துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜூன் 11, 2026: தூத்துக்குடியில் மாற்றுச் சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த காரணத்தால் இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் தாயாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் அபி செல்வி. 19 வயதான அபி செல்விக்கு சேலத்தை சேர்ந்த ஒரு இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம்பெண்ணில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர்:
இந்த காதல் விவகாரம் குறித்து அறிந்த அபி செல்வியின் சகோதரர் சிவஞானம் மற்றும் அவரது தாயார், இளம்பெண்ணை பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அபி செல்வி தொடர்ந்து அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தனது காதலை கைவிட மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அபி செல்விக்கும் அவரது அண்ணன் சிவஞானத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபி செல்வி விஷம் அருந்தி, பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தகவல் பரவியது.
வேலைக்கு சென்றிருந்த அவரது தாயார் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மகள் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அபி செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆணவக்கொலை செய்து நாடகமாடிய அண்ணன்:
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அபி செல்வி காதலித்து வந்த இளைஞர் மாற்றுச் சமூகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதன் காரணமாக குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அபி செல்வி தொடர்ந்து காதலருடன் தொடர்பில் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் சிவஞானம், இளம்பெண்ணை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையை மறைக்க, அபி செல்வி தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியதும் காவல்துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க: வரலாற்று உச்சத்தில் சென்னையின் மின் தேவை.. 5,000 மெகாவாட்டைத் தாண்டியது.. இந்தியாவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை!
இதையடுத்து அபி செல்வியின் அண்ணன் சிவஞானத்தையும், அவரது தாயாரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுச் சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த காரணத்தால் இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.