ஆகஸ்ட் மாதம் முதல் வரப்போகும் முக்கிய மாற்றம்.. விரைவு ரயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டம்.. என்ன காரணம்?
இந்தப் பணிகள் நடைபெறும் காலத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்காமல் இருக்க, ரயில் இயக்கத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் சில விரைவு ரயில்களை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜூலை 27, 2026: ஆகஸ்ட் மாதம் முதல், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமேம்பாலப் பணிகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் இங்கிருந்து தொடங்குகின்றன.
எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் மட்டுமல்லாமல், மின்சார ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்குதல், புதிய வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரூ. 840 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள்:
இந்தப் பணிகளின்போது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, ஒரு சில ரயில் சேவைகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.840 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் வகையில், ஐந்து கட்டங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. எத்தனை மாவட்டங்களில் கனமழை இருக்கும்?
இதன் ஒரு பகுதியாக, நடைமேடைகள், பிரம்மாண்ட நடைமேம்பாலங்கள், பயணிகள் காத்திருக்கும் பகுதிகள், ஓய்வறைகள், உணவகங்கள், வணிகப் பகுதிகள், எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம்:
இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்காக அவ்வப்போது ரயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமாகும். இந்தச் சூழலில், மூன்றாவது கட்டமாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
500 டன்களுக்கும் அதிகமான எடையைத் தாங்கக்கூடிய கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு, இந்த இரும்புப் பாலம் நிறுவப்பட்டு வருகிறது. தற்போது காந்தி இர்வின் சாலையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரும் வழித்தடத்தின் முதல் ஐந்து நடைமேடைகளில் இரும்புப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி… விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?
புறநகர் மின்சார ரயில்கள் செல்லும் 10 மற்றும் 11ஆவது நடைமேடைகள் வரையிலான இரும்புப் பாலம் அமைக்கும் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளன.
தாம்பரத்தில் இருந்து விரைவு ரயில்கள் இயக்க திட்டம்:
இந்தப் பணிகள் நடைபெறும் காலத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்காமல் இருக்க, ரயில் இயக்கத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் சில விரைவு ரயில்களை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சில ரயில்களின் தொடக்க நிலையம் தாம்பரத்திற்கு மாற்றப்பட உள்ளது.