மே 8, 2026: தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவான நிலையில், தற்போது அது படிப்படியாக குறைந்து 38 டிகிரி செல்சியஸாக பதிவாகி வருகிறது. வரக்கூடிய நாட்களிலும் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பநிலை குறையக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளில் இருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை, உள்கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு நல்ல கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை:
அந்த வகையில், மே 8ஆம் தேதி ஆன இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக – அதிமுக இணைந்து உரிமை கோரினால் ஏற்க தயார் – தமிழக ஆளுநர் பரபரப்பு பேட்டி
மே 11ஆம் தேதியும் ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 12 மற்றும் 13ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் அதிகபட்சமாக 38.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சென்னைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.1 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 34.9 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.