தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.. குளிரும் அதிகரிக்கும்.. வானிலை அலர்ட்!!
Tamilnadu Weather Update: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று முதல் 25 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை, டிசம்பர் 23: தமிழகத்தில் டிசம்பர் 25ம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், டிசம்பர் மாத இறுதியில், மழைக்கான வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதேசமயம், அதிகாலை வேளையில் பனிமூட்டமும் அதிகரிக்ககூடும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இரவு நேரங்களிலும், அதிகாலை வேளையிலும் குளிர் நடுங்க வைத்து வரும் நிலையில், வரும் நாட்களில் மழையும் இருக்கும், குளிரும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. அதிகப்படியான குளிர் இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..
வானிலை மையம் சொல்வது என்ன?
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் டிசம்பர் 24ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறியுள்ளது.




டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை நிலவரம்:
அதேபோல், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை. எனினும், ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும்.
இன்று முதல் 25 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப்பில் இவ்வளவு வசதியா.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.