AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

Tamilnadu Assembly Election: தேர்தல் முடிவுகளால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது தொண்டர்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கும் ஒரு விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!
முதல்வர் ஸ்டாலின், விஜய், எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Apr 2026 07:15 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிவுகளைப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதி கிருபாகரன், தற்போதைய சமூக ஊடகச் சூழல் இளைஞர்களிடையே ஒருவிதமான தீவிரமான மனப்போக்கை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். “தன்னுடைய தலைவர் தான் ஜெயிக்க வேண்டும், தனது கட்சி தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்” என்ற எண்ணம் இளைஞர்களிடையே மிக ஆழமாகப் பதிந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில பதிவுகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!

தோல்வி என்பது முடிவல்ல: வரலாற்றுப் பாடம்:

அரசியலில் வெற்றி, தோல்வி என்பது ஒரு சுழற்சி என்பதை விளக்க அவர் சில வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கையை உதாரணங்களாகக் கூறினார். இந்திரா காந்தி, பேரறிஞர் அண்ணா, மற்றும் செல்வி ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் அனைவரும் தங்களது அரசியல் பயணத்தில் ஒரு கட்டத்தில் தோல்வியைச் சந்தித்தவர்களே. ஆனால், அந்தத் தோல்வியோடு அவர்கள் சோர்ந்து போய்விடாமல், மீண்டும் போராடி வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்கள். எனவே, தோல்வி என்பது ஒரு தற்காலிகமான பின்னடைவுதானே தவிர, அது வாழ்க்கையின் முடிவல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசியல் தலைவர்களுக்கு வேண்டுகோள்:

தேர்தல் முடிவுகளால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது தொண்டர்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கும் ஒரு விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட வேண்டும். தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதைச் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், யாரும் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: முடிவுக்கு வந்தது 5 மாநில தேர்தல் களம்.. இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!!

பெற்றோர்களுக்கான முக்கிய எச்சரிக்கை:

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தங்கள் வீட்டு இளைஞர்களும், குழந்தைகளும் தேர்தல் முடிவுகளால் உணர்ச்சிவசப்படுகிறார்களா என்பதைப் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். ஒருவேளை தோல்வியால் அவர்கள் அதீத மன அழுத்தத்திற்கு உள்ளானால், தயக்கமின்றி அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் அல்லது மருத்துவ உதவிகளைப் பெற்றுத்தர வேண்டும். அரசியல் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு சமூகப் பொறுப்போடு இந்த ஆலோசனைகளை வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகம் என்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கும் முடிவுகளை ஏற்கும் பக்குவத்திற்குமான களமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Follow Us