“பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து பேரவையில் காரசார விவாதம்”.. ‘ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளை’ vs ‘லாட்டரி மருமகன்’ வார்த்தை மோதலால் பரபரப்பு!
Parandur Airport Project: சென்னை பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம், விமான நிலையக் கொள்ளளவு விரிவாக்கம் மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. பரந்தூர் தேர்வுக்கான காரணங்கள் குறித்த விரிவான செய்தித் தொகுப்பு.
சென்னை, ஆகஸ்ட் 25: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாநிலத்தின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையத் திட்டமான ‘பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம்’ மற்றும் தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கொள்ளளவு விரிவாக்கம் ஆகியவை தொடர்பாக அவையில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. விவாதத்தின் போது உறுப்பினர்களுக்கு இடையே தனிப்பட்ட மற்றும் அரசியல் சார்ந்த காரசாரக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், புதிய விமான நிலையத் திட்டத்தின் அவசியம், பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்கான தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான சந்தேகங்களுக்குப் பொதுப்பணித்துறை மற்றும் நிதித் துறை அமைச்சர்கள் விளக்கமளித்தனர்.
இதையும் படிக்க: கூட்டணி இல்லையென்றால் ஜெயித்திருக்க முடியுமா?”.. பேரவையில் திமுக-அதிமுக-காங்கிரஸ் இடையே காரசார விவாதம்!!
சுற்றுச்சூழல் அனுமதிகள் குறித்த விவாதம்:
சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தற்போதைய சென்னை விமான நிலையம் ஆண்டிற்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளுவதாகவும், முனையம் 3 மற்றும் முனையம் 5 பணிகள் முடிவடையும் பட்சத்தில் ஆண்டிற்கு 55 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் உருவாகும் எனக் குறிப்பிட்டார். இது பெங்களூரு விமான நிலையத்தின் திறனைக் காட்டிலும் அதிகம் எனக் சுட்டிக்காட்டிய அவர், பரந்தூர் திட்டத்திற்கு முறையான சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு (EIA) செய்யப்படவில்லை என்றும், சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதியில் இத்திட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பது சில குறிப்பிட்ட நபர் லாபங்களுக்காகவே என்றும் விமர்சித்தார்.
பேரவையில் எழுந்த காரசார வார்த்தை மோதல்:
விவாதத்தின் போது ‘ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளை’ என அமைச்சர் நிர்மல் குமார் தரப்பிலிருந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவையில் இடமில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக, “நீங்கள் ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளை என்று பேசினால், லாட்டரி மருமகனுக்காகப் புதிய விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றப் பார்க்கிறீர்களா என்று நாங்களும் கேட்க முடியும்” என காரசாரமாகப் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாக எழுந்து நின்று குரல் எழுப்பியதால், “இது ஒன்றும் பி.டி. பீரியட் இல்லை, அனைவரும் அமருங்கள்” என அமைச்சர் நிர்மல் குமார் உறுப்பினர்களைக் கண்டித்து அமைதிப்படுத்தினார்.
பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப மற்றும் புவியியல் காரணங்களை விரிவாகக் விளக்கினார். “சென்னையின் புவியியல் அமைப்பின்படி கிழக்கே வங்கக்கடல் உள்ளது. வடக்கே மணலி, எண்ணூர் தொழில் மண்டலங்கள் மற்றும் பழவேற்காடு சூழலியல் உணர்திறன் பகுதிகள் உள்ளன. தெற்கே சோழிங்கநல்லூர், தாம்பரம் வான்படைத் தளத்தின் கட்டுப்பாட்டுப் பகுதி, கல்பாக்கம் மற்றும் வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம் ஆகியவை குறுக்கிடுகின்றன. இதனால் கிழக்கு, வடக்கு, தெற்குப் பகுதிகளில் விமான நிலையம் அமைக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிடுவதால் புதிய தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் – உதயநிதி ஸ்டாலின்..
மேலும், “மேற்குப் பகுதியில் மட்டுமே வாய்ப்பு இருந்ததால், பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள், குறைந்த அளவிலான மக்கள் இடப்பெயர்வு, நிலத்தின் மதிப்பு மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் ஆகிய அனைத்தையும் ஒப்பீடு செய்துதான் பரந்தூர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டது. இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.