நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்.. வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி?
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை, ஜூன் 12 : தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் (tamil nadu red alert) விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025 ஜூன் 12ஆம் தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் (tamil nadu weather forecast) என வானிலை மையம் (tamil nadu weather) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2025 மே மாதத்தில் இருந்தே மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அவ்வப்போது சென்னையிலும் பெய்து வந்தது. இதற்கிடையில், 2025 மே 24ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 2025 மே 30ஆம் தேதிக்கு பிறகு பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
ஐந்து நாட்களுக்கு ரெட் அலர்ட்
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 ஜூன் 12ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.




அதோடு, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2025 ஜூன் 13ஆம் தேதியான நாளை கோவை, நெல்லை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும். 2025 ஜூன் 14ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கன முதல் அதி கனமழையும், கோவை, நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி?
REGIONAL DAILY WEATHER REPORThttps://t.co/jW8fHWhd07 pic.twitter.com/mnynQeoe03
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 11, 2025
2025 ஜூன் 15ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு கன முதல் அதி கனமழையும், கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
2025 ஜூன் 16,17ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழையும், நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூன் 12ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.