தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. பிச்சு உதறபோகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather Update : தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில், நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 11 : தமிழகத்தில் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (tamil nadu weather forecast) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் (chennai rain update) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட விரைவாகவே தொடங்கியது. வழக்கமாக 2025 ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவமழை, 2025ஆம் ஆண்டில் மே 24ஆம் தேதியே தொடங்கியது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையொட்டி மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. மேலும், தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. அதனைத் தொடர்ந்து, ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து, வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இரு தினங்களாக மழை படிப்படியாக பெய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, 2025 ஜூன் 11ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2025 ஜூன் 12, 13, 14ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி?
DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREA pic.twitter.com/tlmHx5sj29
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 10, 2025
2025 ஜூன் 15ஆம் தேதி நீலகரி மாவட்டத்திற்கு கன முல் அதி கனமழையும், கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஜூன் 16ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை 2025 ஜூன் 11ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடுன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.