இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னைக்கு மழை இருக்குமா? வானிலை ரிப்போர்ட் இதோ..
Weather Update: சென்னையைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17, 2026: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பதிவாகி வந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் திருச்சியில் அதிகபட்சமாக 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 39.1 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38.1 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.5 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
இது ஒரு புறம் இருக்க, வரக்கூடிய அடுத்த சில தினங்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று, நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 3வது அணியை உருவாக்க முயற்சி – மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரேவை சந்தித்த கனிமொழி
செப்டம்பர் 23ஆம் தேதி வரை தொடரும் கனமழை:
செப்டம்பர் 19ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சேலத்தின் ஆவின் நெய் தட்டுப்பாடு… கர்நாடகாவின் நந்தினி நெய்யை விற்பதால் சர்ச்சை
செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் வானிலையில் மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
சென்னையைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.