தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு? மருத்துவர்கள் மீது பாயும் நடவடிக்கை
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தை காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூலை 15 : சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தை மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அத்திப்ட்டு பகுதியை சேர்ந்த ஷினு அலெக்சாண்டர் மற்றும் ஜிஷா தம்பதியின் 5 வயது பெண் குழுந்தை காய்ச்சல் காரணமாக கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அடுத்த நாளே அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு?
இந்த நிலையில் மருத்துவமனை மீது குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது பெண் குழந்தையின் பெற்றோர் அம்பத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம் நடத்திய விசாரணையில் குழந்தைக்கு ஹைப்போடென்சிவ் ஷாக் எனப்படும் ரத்த அழுத்த அதிர்ச்சி ஏற்பட்டு குழந்தையின் இதய துடிப்பு நின்றதாக கூறப்படுகிறது. மேலும் இதனை முன் கூட்டியே கணிக்க தவறிய மருத்துவ குழுவின் செயல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதனையடுத்து இது மருத்துவ அலட்சியம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : இந்தியாவிலேயே அதிக வெப்பம்.. மதுரையில் 42.5 டிகிரி செல்சியஸ் வெயில்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை..




இந்த நிலையில் இதில் தொடர்புடைய 2 தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம் மாநில மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதன் பேரி மருத்துவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் 2 பேரில் ஒரு மருத்துவர் ஆஜராகாததால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டன.
மருத்துவர்கள் மீது பாயும் நடவடிக்கை
இரு மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே ஆஜரானதால், இருவரையும் அடுத்த மாதம் மீண்டும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை மற்றும் பிற மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவெடுத்த தந்தை – மனைவியின் வீட்டில் நடந்த சோகம்
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் முழுமையான விவரங்களை தெரிந்துகொண்ட பிறகே சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நமக்கு சொல்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது கூடுதல் கவனத்துடன் கையாள்வது மிகவும் அவசியமாகிறது.