ரூ.100 கோடி பழனி முருகன் கோவில் நில மோசடி புகார்.. “டிசைன் டிசைனா ரீல் சுத்தாதீங்க”.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்!!
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில முறைகேட்டில், தனது உறவினர்களுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனக்கே தெரியாமல் புதிய உறவினர்களை உருவாக்கி அவதூறு பரப்புகிறார்கள் எனக் கூறியுள்ள அவர், தவறு செய்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், நிலம் மீட்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
சென்னை, ஜூலை 15: திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாகத் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, இந்த நில ஆக்கிரமிப்பு மோசடியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் நெருங்கிய உறவினர்களுக்குத் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக வலைதளங்களும் குற்றம் சாட்டி வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை புகார்களையும் திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் ரமேஷ், அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தனது அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார்.
இதையும் படிக்க: சாத்தான்குளம் பாணி கொடூரம்?.. நாகர்கோவில் சிறைக்கைதி மரண வழக்கு.. உடற்கூராய்வில் அதிர்ச்சி.. 3 காவலர்கள் கைது!!
சர்ச்சைக்குரிய ரூ.100 கோடி நிலம்:
பழனி முருகன் கோயில் அடிவாரத்தில், பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் 1.40 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலத்தைத் தனிநபர்கள் சிலர் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விடுப்பில் சென்ற சார்பதிவாளர், ‘இந்த நிலத்தைப் பதிவு செய்யக்கூடாது’ எனத் தெளிவாக எழுதி வைத்திருந்ததையும் மீறி, பொறுப்புச் சார்பதிவாளர் மூலமாக இந்த மோசடி அரங்கேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரின் மீது எழுந்த குற்றச்சாட்டு
இந்தச் சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் நெருங்கிய உறவினர் பெயரிலேயே செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நில ஆக்கிரமிப்புக்கு அமைச்சரே முழுமையாகத் துணை போயுள்ளார் என்றும் சமூக வலைதளங்களிலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கடுமையான விமர்சனங்களும் புகார்களும் முன்வைக்கப்பட்டன.
அமைச்சர் ரமேஷ் அளித்த விளக்கம்:
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் ரமேஷ், செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கோயில் நிலத்தைப் பட்டா போட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கொடுத்துவிட்டதாகச் சிலர் டிசைன் டிசைனாக, கலர் கலராகப் பொய் சொல்லி ரீல் சுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலத்தை வாங்கிய நபர் என்னுடைய உறவினர் என்று கூறுகிறார்கள். எனக்கே தெரியாமல் எனக்குப் புதிய உறவினர்களைப் புதுசு புதுசாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.”
ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்:
“என்னுடைய உறவினர்தான் அந்த 100 கோடி ரூபாய் சொத்தை வாங்கினார் என்று யாராவது கூறினால், அதற்கான ஆதாரத்தைக் காட்டச் சொல்லுங்கள். அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது அவதூறு பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நிலத்திற்குப் புதிதாகப் பட்டா போட்டு கொடுத்துவிட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். ‘இனாம் ஒழிப்புச் சட்டத்தின்’ மூலமாக அவர்களுக்கு ஏற்கனவே பட்டா கொடுக்கப்பட்டுவிட்டது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மக்கள் அங்குதான் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் சில அரசியல் காரணங்களுக்காகப் புதிதாக ‘அப்பாக்களை’ உருவாக்கியது போல், இப்போது தனக்கு இல்லாத உறவினர்களை உருவாக்கிப் பொய்களைப் பரப்பி வருகிறார்கள்.”
காவல்துறை மற்றும் துறை சார்ந்த நடவடிக்கை
முன்னதாக, அந்த இடத்தை எக்காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டும், பொறுப்புச் சார்பதிவாளர் அதற்கு உடன்பட்டு நிலத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட பொறுப்புச் சார்பதிவாளர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம்.. த.வெ.க நிர்வாகி என்றால் ஒரு சட்டம் – மாற்றுத்திறனாளி காவல் மரணத்தில் உதயநிதி கேள்வி..
இந்த முறைகேடு தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சர்ச்சைக்குரிய அந்த நிலம் மீண்டும் எவ்விதச் சந்தேகமும் இன்றி இந்து சமய அறநிலையத்துறையின் வசமே முழுமையாக வந்து சேரும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.