தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம்?விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை – சிக்கும் முக்கிய தலைகள்?
ஊத்தங்கரை எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோதமாக பணம் கைமாறி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையிலெடுத்துள்ளது. சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றது உறுதியானால் இந்த வழக்கை அமலாக்க்த்துறை கையிலெடுக்கும் என கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூலை 15 : ஊத்தங்கரை எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோதமாக பணம் கைமாறி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையிலெடுத்துள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்தப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம்?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை சிலர் தொடர்பு கொண்டு, சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது தாங்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் ரூ.35 கோடி தருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்தால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டல் விடுத்ததாக அவர் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க : இந்தியாவிலேயே அதிக வெப்பம்.. மதுரையில் 42.5 டிகிரி செல்சியஸ் வெயில்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை..



இந்த நிலையில் அவரது புகார் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இதுவரை 11 நபர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட சிலர் கூறியதாக தகவல் வெளியானது. இதை அடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே இருவரும் கடந்த ஜூலை 13, 2026 திங்கட்கிழமை காவல் நிலையத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இருவரும் ஆஜராகாமல் முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் கிண்டி பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதற்கு திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தொடர்பு இருப்பதும், இதற்காக சுமார் 180 கோடி வரை பணம் செலவிடப்பட இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிக்க : சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம்.. த.வெ.க நிர்வாகி என்றால் ஒரு சட்டம் – மாற்றுத்திறனாளி காவல் மரணத்தில் உதயநிதி கேள்வி..
இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள இருவரிடம் இருந்து மட்டும் ரூ.60 லட்சம் அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றது உறுதியானால் இந்த வழக்கை அமலாக்க்த்துறை கையிலெடுக்கும் என கூறப்படுகிறது.