சாதி மோதல்கள்… ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
Tamil Nadu Education Department : பள்ளிகளில் சாதி மோதல்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சாதி வேறுபாடுகளை வெளிப்படையாக தெரியக் கூடிய அடையாளங்கள் அணியக் கூடாது எனவும் ஆசிரியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்க கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, ஜூன் 27 : பள்ளிகளில் சாதி மோதல்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை (Tamil Nadu Education Department) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாதி குறியீடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது எனவும் ஆசிரியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீப காலங்களில் பள்ளிகளில் சாதி மோதல்கள் தொடர் கதையாகி வருகிறது. இதனால், மாணவர்கள் ஒருவரைக்கொருவர் தாக்கும் சம்பவங்களுக்கு அரங்கேறி வருகிறது. மேலும், மாணவர்கள் அரிவாள், கத்தி என கூர்மையான ஆயுதங்களுடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அண்மையில் கூட, திருநெல்வேலி நாங்குநேரியில் சாதி தொடர்பான பிரச்னையால் மாணவர்கள் ஒருவர் தாக்குதலுக்கு ஆளானார்.
சாதி மோதல்கள்
இது தமிழகத்தையே உலுக்கியது. அதைத் தொர்ந்து, 2025 மே மாதம் திருநெல்வேலி பள்ளி வளாகத்தில் மாணவன் ஒருவர் சக மாணவனை கத்தியால் வெட்டி உள்ளார். இதனை அடுத்து, அந்த மாணவன் காவல் நிலையத்திலும் சரணடைந்தார். எனவே, பள்ளிகளில் சாதி மோதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் சாதி மோதல்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், “பள்ளிகளில் மாணவர்களின் சாதிப் பெயர்களை மந்தனமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான எந்த விவரங்களும் இருக்கக் கூடாது.




எந்த நேரத்திலும் வகுப்பு ஆசிரியர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மாணவர்களின் சாதியைக் குறிப்பிட்டு அழைக்கக் கூடாது. மாணவர்களின் சாதி அல்லது சாதியக் காரணமாக தன்மை பற்றி இழிவான கருத்துகளை தெரிவிக்க கூடாது.
நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை
மாணவர்கள் வண்ண மணிக்கட்டுப்பட்டைகள், மோதிரங்கள் அல்லது சாதி வேறுபாடுகளை வெளிப்படையாக தெரியக் கூடிய அடையாளங்கள் அணிவதைத் தடை செய்வதோடு, அவற்றை அணிவதை தடுப்பதற்கான ஆலோசனைகளை பெற்றோருக்கு வழங்க வேண்டும்.
மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிட்டு மிதிவண்டிகளில் பள்ளிக்கு வர கூடாது. இந்த விதிகளை பின்பற்ற தவறினால் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துவதோடு கூடுதலாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், “பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவதை தடை விதிக்க வேண்டும்.
6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நன்நெறி வகுப்புகள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். எந்த ஒரு மாணவரும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டால், அந்த மாணவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க தலைமை ஆசிரியர் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு பரிந்துரைத்து மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.