AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டில் இருந்த நகையை காதலனுக்கு கொடுத்த மாணவி… திருப்பி கேட்டதால் தாய்க்கு நேர்ந்த கொடூர தாக்குதல்!

Nagercoil Crime: நாகர்கோவிலில் கல்லூரி மாணவி தனது காதலனின் அவசர தேவைக்காக வீட்டில் சேமித்து வைத்திருந்த 10 பவுன் நகைகளை கொடுத்ததாக தெரிவித்தார். நகைகளை திருப்பி கேட்டு தாய் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காதலன் உருட்டு கட்டையால் தாக்கியதுடன், மாணவியும் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்த நகையை காதலனுக்கு கொடுத்த மாணவி… திருப்பி கேட்டதால் தாய்க்கு நேர்ந்த கொடூர தாக்குதல்!
கோப்புப்படம் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Mar 2026 10:30 AM IST

நாகர்கோவில் பிள்ளையார்புரம் அன்னம்வலை கம்பெனி தெரு பகுதியில் வசித்து வரும் சுந்தர்ராஜின் மனைவி கலாவதி (வயது 42) மீது நடந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறுக்கு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்த கலாவதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். குடும்பம் சாதாரண பொருளாதார நிலையில் இருந்தாலும், மகள்களின் எதிர்காலத்திற்காக கலாவதி கடினமாக உழைத்து நகைகள் சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

காதலனுக்காக நகைகள் கொடுத்த மாணவி

கல்லூரியில் படித்து வந்த இரண்டாவது மகள், அதே கல்லூரியில் படிக்கும் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மகள்களின் திருமணத்திற்காக கலாவதி சேமித்து வைத்திருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகள் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கலாவதி, நகைகள் எங்கே சென்றது என்று தனது மகளிடம் கேட்டார். அப்போது மாணவி, தனது காதலன் அவசர தேவைக்காக பணம் கேட்டதால், அந்த நகைகளை அவரிடம் கொடுத்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட கலாவதி மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.

தாய்–மகள் இடையே ஏற்பட்ட தகராறு

நகைகளை திருப்பி கொண்டு வரும்படி தாய் மகளிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கலாவதி, அந்த நகைகள் மகள்களின் திருமணத்திற்காக சேமித்து வைத்தவை என்பதால் அவற்றை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தாய் மற்றும் மகளுக்கு இடையே பலமுறை தகராறு ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். குடும்பத்தில் இந்த விவகாரம் காரணமாக பதற்றமான சூழல் நிலவியதாகவும் கூறப்படுகிறது.

Also Read: மானாமதுரையில் கைதி லாக் அப் டெத்… 6 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை

வீட்டிற்கு வந்த காதலன் – வன்முறையாக மாறிய தகராறு

இந்த நிலையில், நேற்று மாணவியின் வீட்டிற்கு அவரது காதலன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நகைகள் தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு திடீரென வன்முறையாக மாறியது. ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்துக் கொண்டு கலாவதியின் பின்தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த கலாவதி தரையில் விழுந்தார்.

கொலை முயற்சி – உயிருக்கு போராடிய கலாவதி

இதற்குப் பிறகு சம்பவம் மேலும் அதிர்ச்சிகரமாக மாறியது. கலாவதி கீழே விழுந்த நிலையில் இருந்தபோது, மாணவியும் அவரது காதலனும் சேர்ந்து துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கலாவதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் இருவரும் பதற்றமடைந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – இருவர் கைது

அக்கம் பக்கத்தினர் உடனடியாக கலாவதியை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவியும் அவரது காதலனும் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us