வீட்டு சிலிண்டர்களை வணிகத்துக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.. தமிழக அரசு எச்சரிக்கை!!
Tamil Nadu govt warning: ஒருபுறம் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவ, மறுபுறம் பல்வேறு வணிக நிறுவனங்களும் வீட்டு உபயோக சிலிண்டர்களை (Domestic Cylinders) சட்டவிரோதமாக வணிகத் தேவைக்கு மாற்றிப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதை முறியடிக்க தமிழக அரசு அதிரடியாக களமிறங்கியுள்ளது.
சென்னை, மார்ச் 12: வீட்டு கேஸ் சிலிண்டர்களை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர் சூழல், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிக ரீதியான சிலிண்டர்களின் இருப்பு பெருமளவு குறைந்துள்ளது. சந்தையில் நிலவும் இந்த தட்டுப்பாட்டினால், வணிக நிறுவனங்களுக்கான சிலிண்டர் விநியோகம் பல நாட்களாகத் தாமதமாகி வருகிறது.
இதையும் படிக்க: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு… 2 மடங்கு உயர்ந்த விறகு விலை – தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு:
இந்த நெருக்கடியின் காரணமாக, பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் எரிவாயு கையிருப்பு தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டின் காரணமாக, ஹோட்டல் உரிமையாளர்கள் உணவு வகைகளைச் சுருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக பெரும்பாலான ஹோட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. மின்சார அடுப்புகள் அல்லது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் நிலைக்குச் சிறிய உணவகங்கள் தள்ளப்பட்டுள்ளன. பல உணவகங்கள் தங்களது வழக்கமான இயக்க நேரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளன.
வீட்டு சிலிண்டரை பயன்படுத்தும் நிறுவனங்கள்:
ஒருபுறம் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவ, மறுபுறம் சில வணிக நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை (Domestic Cylinders) சட்டவிரோதமாக வணிகத் தேவைக்கு மாற்றிப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதை முறியடிக்க தமிழக அரசு களமிறங்கியுள்ளது. அவ்வாறு, வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு:
அவ்வாறு வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை வணிக ரீதியாக பயன்படுத்தினால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28592828 என்ற எண்ணிலும், 1967 என்ற உதவி எண்ணிலும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் புகார் அளிக்கலாம். அவ்வாறு பொது மக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும்.
இதையும் படிக்க : கேஸ் தட்டுப்பாடு – சென்னையில் கடைகளில் டீ விற்பனை நிறுத்தம்…. வடைகளின் விலை உயர்வு
அவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது, வீட்டு உபயோக சிலிண்டரை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உடனடியாக சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த பயன்படுத்தும் நிறுவனத்தின் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்ததின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.